சங்கமாக இருந்த பாமகவை கட்சியாக மாற்றிய ராமதாஸ் - காரணம் என்ன?
வன்னியர் சமூக மக்களுக்காக தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி பற்றி இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.
கட்சி தொடக்கம்
வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக 1990 ஆம் ஆண்டு மருத்துவர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினார்.
முன்னதாக 1980களில் வன்னியர் சங்கமாக இருந்தது. இந்த சங்கம் ஒரு வாரமாக தொடர் சாலை மறியலை நடத்தியது.
இதையடுத்து இக்கட்சியை சேர்ந்த 17 ஆயிரம் பேர் சிறைக்கு சென்றனர். பின்னர் அந்த சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக மாற்றினார் மருத்துவர் ராமதாஸ்.
இக்கட்சிக்கு தொடக்கத்தில் யானை சின்னம் வழங்கப்பட்ட நிலையில் தேர்தல்களில் இச்சின்னதிலேயே போட்டியிட்டு வந்தது பாமக.
பின்னர் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியும் யானை சின்னத்தை நாடு முழுவதும் பயன்படுத்தியதால் யானை சின்னம் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
சின்னம் பறிப்பு
பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தமிழ்நாடு மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை இழந்ததால் அதன் யானை சின்னம் பறிக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் பாமக தகுதி இழக்காததால் அந்த மாநிலத்தில் மட்டும் யானை சின்னத்தை பயன்படுத்தி கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.
இதையடுதது 1998 ஆம் ஆண்டு இக்கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. பின்னர் இக்கட்சி மாம்பழம் சின்னதிலேயே தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது.
விதிகளின் படி மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை தேர்தல் ஆணையம் பறித்து விட்டாலும் 2016 சட்டமன்ற தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட இக்கட்சிக்கு அனுமதி வழங்கியது தேர்தல் ஆணையம்.
கட்சிக் கொடி
பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியானது நீலம், மஞ்சள், சிகப்பு ஆகிய வண்ணங்களில் உருவானது. இக்கொடி தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மதவாரி சிறுபான்மையினர் ஆகிய அனைத்து தரப்பினருக்காகவும் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
யார் இந்த ராமதாஸ்?
விழுப்புரம் மாவட்டம் கீழ்சிவிரி என்னும் ஊரில் 1939 ஆம் ஆண்டு ஜுலை 25 தேதி சஞ்சீவராயக் கவுண்டர், தாயார் நவநீத அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் ராமதாஸ்.
மருத்துவக் கல்வி பயின்ற இவர் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். பின்னர் 1967 ஆம் ஆண்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரியத் தொடங்கினார்.
ராமதாஸ் திருமணம்?
மருத்துவர் ராமதாஸ் சரஸ்வதி அம்மாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரீகாந்தி, மற்றும் கவிதா என இரண்டு மகளும், அன்புமணி என்னும் ஒரு மகனும் உள்ளனர்.
அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தற்போதைய தலைவராக இருந்து வருகிறார்.
தொடர் சேவைகள்
இவர் மது விலக்கிற்காக தொடர்ந்து 34 ஆண்டுகளாக போராடி வருகிறார்.
தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே இருக்க வேண்டும் என்று கூறி தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை தொடங்கினார்.
தமிழை வளர்ப்பதற்காக பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையை நிறுவினார். பசுமைத் தாயகம் என்னும் தன்னார்வ அமைப்பை நடத்தி வருகிறார்.
மகனை அமைச்சராக்கிய ராமதாஸ்
மகன் அன்புமணி ராமதாஸை மருத்துவர் ஆக்கி அழகு பார்த்த ராமதாஸ் அரசியல் களத்திற்கும் அன்புமணியை கொண்டு வந்தார்.
ஆரம்ப கட்டத்தில் உறுப்பினராக பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்த அவருக்கு 2004 ஆம் ஆண்டு நடந்த மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றார். இதையடுத்து அவருக்கு சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அன்புமணி ராமதாஸ் யார்?
1968 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி பிறந்தவர் அன்புமணி. இவர் தனது 10 ஆம் வகுப்பை ஏற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் 1984 ஆம் முடித்தார்.
தனது பன்னிரெண்டாம் வகுப்பை தன் சொந்த ஊரான திண்டிவனத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பயின்றார்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் தென்னாற்காடு மாவட்டத்தில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். பினனர் மருத்துவக் கல்லுாரியில் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்த அவர் ஒன்றரை ஆண்டுகள் மருத்துவ சேவையை செய்தார்.
பின்னர் 2003 ஆம் ஆண்டு லண்டன் பொருளியல் பள்ளியில் பெருநிலைப் பொருளியல் என்னும் படிப்பை படித்துள்ளார்.
விளையாட்டை விரும்பிய அன்புமணி
அன்புமணிக்கு விளையாட்டு என்றால் அவ்வளவு ஆசை. படிக்கும் போது கால்பந்து, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்ற அவர் கால்பந்து போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மாநில அளவில் பதக்கங்களை வென்றார். தற்போது அன்புமணி தமிழ்நாடு இறகுபந்து சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்.
அன்புமணி திருமணம்
அன்புமணி ராமதாஸ் , சௌமியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா என மூன்று மகள்கள் உள்ளனர்.
இவர்களில் சம்யுக்தாவிற்கும், அன்புமணியின் அக்கா மகனான பிரித்தீவன் என்பவருக்கும் அக்டோபர் 30, 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் நகர்வு
இவர் தனது தந்தை தோற்றுவித்த பாட்டாளி மக்கள் கட்சியில் உறுப்பினராக இணைந்தார். பின்னர் அவர் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவராக நியமனம் செய்யப்பட்டார். 2004 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினரான இவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது.
முதலமைச்சர் வேட்பாளர்
சேலம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சட்டமன்ற தேர்தலுக்கான கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
2016 சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் இவரும், இவருடைய கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களும் அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தனர்.
இவர் நின்ற பென்னாகரம் தொகுதியில் 58,402 வாக்கு பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்கு சதவீத அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சி (23,00,775 வாக்குகள், 5.3 %) மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
பாமகவின் முக்கிய தலைவர்கள் யார்?
ஜி.கே. மணி
கோ.க.மணி என்ற ஜிகே மணி முன்னாள் மாநில தலைவராக இருந்தவர், சேலம் மாவட்டம் அருகே உள்ள கோவிந்தபாடி கிராமத்தில் பிறந்த இவர் பாமக கட்சியில் இணைந்தார்.
பின்னர் இவர் 1996, 2001 சட்டமன்ற தேர்தல்களில் பென்னாகரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2006 ஆம் ஆண்டு மேட்டூர் சட்டமன்ற தொகுதியிலும் வெற்றி பெற்றார். மீண்டும் 2021 ஆம் ஆண்டு பென்னாகரம் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்ட ஜிகே மணி வெற்றி பெற்றார்.
என். டி. சண்முகம்
பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என். டி. சண்முகம். இவர் முன்னாள் உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சராக இருந்துள்ளார்.
1998, 1999 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தலில் வேலுார் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏ. கே. மூர்த்தி
பாமகவின் துணை பொது செயலாளரான ஏ. கே. மூர்த்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 1999 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மக்களவை தொகுதியில் போட்டியிட்ட இவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பின்னர் இவர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் போது 2002 ஆம் ஆண்டு ரயில்வே துறை இணை அமைச்சராக பதவி வகித்துள்ளார். இவர் 2002 ஆம் ஆண்டு இரயில்களில் தொட்டில் குழந்தை திட்டம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அர.வேலு
ரங்கசாமி வேலு என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் ஆவார். 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை அரக்கோணம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் இரயில்வே அமைச்சராகப் பணியாற்றி உள்ளார். இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.
கூடுதல் பதிவாளர், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்தார்; தமிழ்நாடு பொது சேவை ஆணையத்தின் உறுப்பினராகவும் செயல்பட்டார்.
வடிவேல் இராவணன்
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலாளரான வடிவேல் இராவணன் அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.
1980 ஆம் ஆண்டு இக்கட்சியில் இணைந்த இவர் இலக்கிய-கலைப் பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார்.
பாமக-நாம் தமிழர் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா? சீமான் அளித்த பதில்