காலம் வரட்டும் , தொண்டர்கள் சூழ அதிமுக அலுவலகம் செல்வேன் : சசிகலா அதிரடி அறிவிப்பு
அதிமுக அலுவலகத்திற்கு நேரம் வரும் போது தொண்டர்கள் புடை சூழ செல்வேன் என்று வி.கே சசிகலா கூறியுள்ளார் .
பூந்தமல்லி குமணன்சாவடி பகுதியில், வி.கே.சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது பேசிய அவர், 50 ஆண்டு கால வரலாற்றில் அதிமுக இதுபோன்று தொடர் தோல்விகளை ஒருபோதும் கண்டது இல்லை.
தொண்டர்கள் கண்ணீர் சிந்துகின்றனர்
அதிமுகவில் தற்போது நடக்கும் நிகழ்வுகளை பார்க்கின்ற ஒவ்வொரு கட்சித் தொண்டரும் மனம் வேதனையடைந்து கண்ணீர் சிந்துகிறார்கள். இதற்காகவா இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு உழைத்தோம் என்று மனம் உடைந்து காணப்படுகின்றனர்.
உள்ளாட்சி அமைப்புகளில் அதிமுக சார்பில் போட்டியிடக்கூடிய காலியாக உள்ள 34 பதவிகளுக்கு நடக்கவிருக்கும் தேர்தலில் தனிப்பட்ட ஒரு சிலரின் சுயநலத்தால், நமது வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழ்நநிலைக்கு அதிமுக தொண்டர்கள் தள்ளப்பட்டிருப்பது மிகவும் வேதனையை அளிக்கிறது.
ஏதாவது சூழ்ச்சிகளை செய்து தாங்கள் உயர்பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்காக, சாதரண கட்சித் தொண்டர்கள் பதவிக்கு வருவதற்கு முட்டுக்கட்டை போடுவது எந்த விதத்தில் நியாயம்?
இது கட்சித் தொண்டர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகம். ஒரு சிலரின் மேல்மட்ட அரசியலுக்கு, அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? உங்களுயைட சுய விருப்பு, வெறுப்புகளு்ககாக இரட்டை இலை சின்னத்தை இதுபோன்று முடக்குவதற்கு யார் முதலில் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது.
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை கண்டிப்பாக வேண்டும். ஆனால், அதே சமயத்தில் தொண்டர்கள் அனைவரையும், அரவணைத்து செல்கின்ற தலைமையாக, அனைத்து கொடி பிடிக்கும் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்டுகிற தலைமையாக இருக்க வேண்டும்.பண பலமும், படை பலமும் ஒரு தலைமையை தீர்மானிக்க முடியாது.
தொண்டர்கள் சூழ கட்சி அலுவலகம் செல்வேன்
மக்கள் பலமும் தொண்டர்கள் பலமும்தான் ஒரு தலைமையை தீர்மானிக்கும். சும்மா பத்து, இருபது பேரை தனக்கு ஆதரவாக பேசவைத்துவிட்டு, நான் தலைமை என்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு, வலுகட்டாயமாக நாற்காலியை பிடித்துக் கொண்டு இருந்தால் தலைவராக ஆகிவிடமுடியாது.
எனவே ஒட்டுமொத்த தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப எனது தலைமையில் இயக்கம் மீண்டும் வலிமை பெறும் என்றார். அத்துடன் தொடர்ந்து பேசிய அவர், அதிமுக தலைமைக் கழக அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய சூழலும், அதற்கான நேரமும் வரும்போது, நிச்சயம் செல்வேன் என்றும் தெரிவித்தார்.
அதிமுகவில் பன்னீர்செல்வம் பழனிசாமி மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில் 3வது ஆளாக சசிகலா நுழைந்துள்ளார்.தொண்டர்கள் புடைசூழ தலைமை அலுவலகத்திற்கு செல்லப் போவதாக திடீர் அறிவிப்பு அரசியல் களத்தில் கூடுதல் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற வாய்ப்பே இல்லை - வைத்திலிங்கம்