அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு ஜெயக்குமார் கமிஷனர் அலுவலகத்தில் மனு..!
அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் சமூக விரோதிகள் நுழைய வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு கேட்டு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
பாதுகாப்பு கோரி அதிமுக மனு
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், அதிமுக தலைமை கழகத்தில் சமூக விரோதிகள் சிலர் அத்துமீறி நுழைய இருப்பதாக நம்ப தகுந்த தகவல்கள் வந்ததை அடுத்து தலைமை கழகத்திற்கு பாதுகாப்பு கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்ததாகவும் அதற்கு காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததாகவும் தெரிவித்தார்.
பொதுக்குழு நடைபெறுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் 100 சதவீதம் நியாயமான நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்.
பொதுக்குழு கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஓபிஎஸ் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தமிழக முதல்வரை சந்தித்து கடிதம் கொடுத்து பேட்டி அளித்ததன் மூலம் அவர் திமுகவுக்கு ஆதரவு என்பது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.
சசிகலாவே ஓபிஎஸ்சுக்கும் திமுகவிற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து கொண்டு ஓபிஎஸ் மகன் தமிழக முதல்வரை பாராட்டி அறிக்கை வெளியிட்டிருப்பது சரியா?.
ஓபிஎஸ் மகன் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி ஐஸ் வைக்கிறார். இதன் மூலம் ஓபிஎஸ் தரப்பு திமுக ஆதரவாக செயல்படுவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்றார்.
முன்னாள் அமைச்சர் முனுசாமியின் மகன் கிருஷ்ணகிரியில் பெட்ரோல் பங்க் வைப்பதற்கு திமுக அமைச்சர் காந்தி உதவி செய்தது குறித்த கேள்விக்கு பதில் அளிக்க திணறிய ஜெயக்குமார்,
முதல்வர் மு.க ஸ்டாலின் கட்டுப்பாட்டின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை செயல்படுவதாகவும், அவரது ஏவுதலின் பேரில் பழிவாங்கும் நடவடிக்கையாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடைபெறுவதாகவும், ஆனால் வருமான வரித்துறையினர் முன்னாள் அமைச்சர்களின் வீட்டில் சோதனை நடத்தவில்லை எனவும் தெரிவித்தார்.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு - ஜூலை 11 காலை 9 மணிக்கு தீர்ப்பு..!