மன உளைச்சலில் உள்ள ஓபிஎஸ் - திட்டமிட்ட அவமானம்..ஈபிஎஸ் ஏன் தடுக்கவில்லை? ஜே.சி.டி.பிரபாகர்

Tamil nadu AIADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Sumathi Jun 25, 2022 05:01 AM GMT
Report

பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை திட்டமிட்டு அவமானப்படுத்தினார்கள், உறுப்பினர்கள் கோஷம் எழுப்பும் போது எடப்பாடியோ, அங்கு உள்ளவர்களோ ஏன் தடுக்கவில்லை? ஓபிஎஸ் மிகவும் மன உளைச்சலில் உள்ளார் என ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.

 ஜே.சி.டி பிரபாகர்

சென்னை சேத்துபட்டில் உள்ள அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் அதிமுக மூத்த நிர்வாகியுமான ஜே.சி.டி பிரபாகர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது,

மன உளைச்சலில் உள்ள ஓபிஎஸ் - திட்டமிட்ட அவமானம்..ஈபிஎஸ் ஏன் தடுக்கவில்லை? ஜே.சி.டி.பிரபாகர் | Insulted The Ops Why Edappadi Not Stop Voices

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் முறையாக அடிப்படை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரு பெரும் தலைவர்கள். கடந்த 14ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், மாதவரம் மூர்த்தி எழுந்து நின்றவுடன் எடப்பாடி பழனிச்சாமி, அவரிடம் மைக் கொடுங்கள் என்று கூறினார்.

 பிரச்சினைக்கு காரணம்

அதன்பின் மாதவரம் மூர்த்தி ஒற்றை தலைமை பற்றி பேசிய போது, இ.பி.எஸ் அவரை தடுத்திருக்க வேண்டும். மாறாக வேறு யாராவது பேச வேண்டுமா என்று கேட்டார். அது அதிர்ச்சியாக இருந்தது.

தங்களை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சிலர் தான் இந்த பிரச்சினைக்கு காரணம். நாங்கள் இருவரும் கட்சியை நன்றாக வழி நடத்தி வருகிறோம் என்று சேலத்தில் கடந்த 9ம் தேதி எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திட்டமிட்டு அவமானம்

9ம் தேதிக்கு 14ம் தேதிக்கு இடையில் என்ன நடந்தது என தொண்டர்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் ஓ.பி.எஸ் பக்கம் தான் உள்ளார்கள். பொதுக்குழு கூட்டத்தில் ஒ.பன்னீர்செல்வத்தை திட்டமிட்டு அவமானப்படுத்தினார்கள்.

ஒ.பன்னீர்செல்வம் மீது பாட்டில்களை வீசியது மட்டும் இல்லாமல், தகாத வார்த்தைகளை பேசினார்கள். எடப்பாடி பழனிச்சாமி ஏன் அவர்கள் யாரையும் கண்டிக்கவில்லை.

 நாடே பார்த்தது

எங்களை பொதுக்குழுவில் கண்ணியமாக நடத்தினார்களா என்று நாடே பார்த்தது. தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத்தலைவராக நியமனம் செய்தது குறித்து ஈபிஎஸ் மட்டுமே எடுத்த முடிவு. முன்கூட்டியே யாருக்கும் இந்த அறிவிப்பை வெளியிடவில்லை. அது பற்றி விவாதிக்கவும் இல்லை.

அதிமுக ஓ.பி.எஸ் கட்சியோ அல்லது எடப்பாடி கட்சியோ இல்லை. அது தொண்டர்களின் கட்சி. பொதுக்குழுவில் உறுப்பினர்கள் நடந்து கொண்டதை எடப்பாடி பழனிச்சாமியோ, மேடையில் இருந்தவர்களோ தடுக்கவில்லை.

இமேஜ் உயர்ந்திருக்கிறது

திமுகவை எதிர்த்து போடப்பட்ட தீர்மானத்தை கூட இவர்கள் ரத்து செய்துள்ளனர். இதையெல்லாம் படித்திருந்தால், தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள். கட்சியை பிளவு படுத்தும் எண்ணமோ இரட்டை இலையை முடக்கும் எண்ணமோ ஓ.பி.எஸ்க்கு இல்லை.

தொண்டர்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கமும், நிர்வாகிகள் பழனிசாமி பக்கமும் உள்ளனர். தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளாத பொதுக்குழு அன்று நடத்தப்பட்டது.

எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் நடத்தப்பட்டது போல கிராமங்களில் பெட்டியில் வைத்து பொதுக்குழு தலைவர் மற்றும் அனைத்து பதவிகளையும் தேர்வு செய்ய இவர்கள் தயாராக உள்ளனரா? நிச்சயமாக நீதி வெற்றி பெறும். தற்போது ஓபிஎஸ் மிகவும் மன உளைச்சலில் உள்ளார்.

ஒரு தரப்பினரை புறக்கணிக்கிறார்கள். மாவட்ட அலுவலகங்களில் பெயரை அளிப்பது, புகைப்படத்தை நீக்குவது மனவேதனை அளிக்கிறது. திட்டமிட்டு ஓபிஎஸ் மீது பொய் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. அதிமுகவில் அனைத்து பதவிகளுக்கும் ஓட்டுப்பெட்டி வைத்து தேர்தல் நடத்த தயாரா?

அப்போது அவர்களது நிலை தெரிந்துவிடும். கூட்டத்திற்கு பின் ஓ.பி.எஸ் மிகவும் வருத்தப்பட்டார். மன உளைச்சலில் இருக்கிறார். கவலையில் இருக்கிறார். முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்த போதும், எதிர்கட்சி தலைவர் பதவியை விட்டுக்கொடுத்த போதும் அவர் வருத்தப்படவில்லை.

ஓபிஎஸ் தாக்கப்பட்ட பின் அவரது இமேஜ் உயர்ந்திருக்கிறது. சசிகலா அவர்கள் பாதையில் பயணிக்கிறார்கள். நாங்கள் எங்கள் பாதையில் பயணிக்கிறோம்.

இரண்டையும் இணைத்துப் பேச வேண்டாம். சட்டப்படி முறையாக பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்தால் எங்கள் வல்லுநர் குழுவினரோடு கலந்தாலோசித்து பொதுக்குழுவில் ஓபிஎஸ் பங்கு பெறுவது குறித்து முடிவெடுப்பார் என தெரிவித்தார்.    

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 - இன்று முதல் பதிவு!