உலகின் பிரம்மாண்ட சொகுசு கப்பல்; ஈஃபில் கோபுரத்தை விட உயரம் - டிக்கெட் எவ்வளவு தெரியுமா?
உலகின் மிக பிரம்மாண்ட சொகுசு கப்பல் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
சொகுசு கப்பல்
டைட்டானிக் கப்பலை விட 5 மடங்கு பெரியதாக ராயல் கரீபியன் நிறுவனத்தின் “ஐகான் ஆஃப் தி சீஸ்” கப்பல் உருவாகியுள்ளது. சுமார் 16,600 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் “பிஸ்கேன் பே” துறைமுகத்தில் இருந்து வெப்பமண்டல தீவுகளுக்கு பயணத்தை தொடங்கியுள்ளது. இதனை கால்பந்தாட்ட வீரர் லயோனல் மெஸ்ஸி தொடங்கி வைத்தார். 7,600 பயணிகள் மற்றும் 2,350 பணியாளர்கள் என, சுமார் 10 ஆயிரம் பேர் பயணிக்கலாம்.
வசதிகள்
6 நீர் சறுக்குகள், 7 நீச்சல் குளங்கள், பனிச்சறுக்கு விளையாட்டரங்கம், காற்றறை கேளிக்கை விளையாட்டுகள் என பல அம்சங்கள். 20 தளங்கள் கொண்ட இந்த கப்பல் பாரீசில் உள்ள ஈஃபில் கோபுரத்தின் உயரத்தை விட அதிகமாம். 40 உணவகங்கள், மதுக்கூடங்கள், கேசினோ உள்ளிட்ட சூதாட்டங்கள், ஆடை ஆபரணங்கள் நிறைந்த வணிக வளாகங்கள் என கவர்ந்திழுக்கின்றன.
2 ,50,800 டன் எடையைக் கொண்டுள்ளது. இதில், 7 நாட்கள் பயணிக்க இந்திய மதிப்பில் 1,40,000 ரூபாய் முதல், 11 ,80,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
6 எஞ்சின்களும் எல்.என்.ஜி எனப்படும் திரவ எரிவாயுவை கொண்டு இயங்குவதன் மூலம் மீத்தேன் வாயுவை உமிழ்வதால் சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக இருக்கும் என கவலை தெரிவிக்கப்படுகிறது.