இவ்வளவு அம்சங்களா; உலகின் மிக நீளமான சொகுசு கப்பல் - தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
காணொலி காட்சியின் வாயிலாக வாரணாசியில் சொகுசு கப்பலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
சொகுசு கப்பல்
இந்த சொகுசு கப்பல் தனது பயணத்தை உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கி 51 நாட்கள் பயணித்து அசாமின் திப்ருகர் வழியாக பங்களாதேஷ் சென்றடையும். இந்தியா மற்றும் பங்களாதேஷ் பகுதிகளில் உள்ள 27 நதி அமைப்புகளை கடந்து செல்ல உள்ளது.
மூன்று தளங்கள், 18 அறைகள் கொண்ட இந்த கப்பல், சொகுசு வசதிகளுடன் 36 சுற்றுலா பயணிகளின் தாங்கும் திறன் கொண்டதாக திகழ்கிறது. இந்த கப்பலின் முதல் பயணத்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 32 சுற்றுலா பயணிகள் முழுமையாக பயணிக்கின்றனர்.
நதி வழி பயணம்
உலக பாரம்பரிய இடங்கள், தேசிய பூங்காக்கள், நதிக்கரைகள், பீகாரின் பாட்னா, ஜார்க்கண்ட்டின் சாஹிபஞ்ச், மேற்கு வங்கத்தின் கொல்கத்தா, பங்களாதேஷின் டாக்கா, அசாமின் குவாஹத்தி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்கள் வழியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சொகுசு கப்பலில் ஒரு நாள் இரவு தங்கி பயணிக்க ரூ.25,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வாரணாசி மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பொதுத்துறை, தனியார் துறைகளின் பங்களிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்நிகழ்வில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவல், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.