சுரங்க விபத்து: திடீரென கேட்ட பயங்கர சத்தம், மீட்பு பணிகள் தற்காலிக நிறுத்தம் - 40 பேர் கதி?
சுரங்க விபத்து மீட்பு பணியில் விரிசல் ஒலி கேட்டதால் மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சுரங்க விபத்து
உத்தரகாண்ட், உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் 4வது நாளாகம் நடந்து வருகிறது. இடிபாடுகளுக்குள் எஃகு குழாய்களை செலுத்தி தொழிலளார்களை மீட்கும் விதமாக புதிய இயந்திரத்தை நிர்மாணிக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தொழிலாளர்கள் சுவாசிப்பதற்காக குழாய் வழியாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது. உணவு பொருட்கள், குடிநீர் உள்ளிட்டவை மற்றொரு குழாய் வழியாக விநியோகிக்கப்பட்டும், வாக்கி டாக்கி மூலம் தொழிலாளர்களுடன் அதிகாரிகள் அவ்வப்போது பேசி வருகின்றனர்.
விரிசல் ஒலி
இருபுறமும் மணல் மூடிய நிலையில் சுரங்கப் பாதைக்குள் 40 தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். பல்வேறு துறைகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது திடீரென விரிசல் சத்தம் கேட்டுள்ளது. மேலும் அங்கே மீண்டும் சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தன.
இதனிடையே சுரங்கத்துக்குள் இருக்கும் வெப்பநிலை, வெளியே இருக்கும் வெப்பநிலையைவிட ஒப்பீட்டு அளவில் அதிகமாக இருக்கிறது.
எனவே 60 மீட்டர் தூரம் துளையிடப்பட வேண்டிய நிலையில் 24 மீட்டர் தூரத்திற்கு துளையிட்ட சமயத்தில் மீட்புப் பணிகள் நிறுத்து வைக்கப்பட்டுள்ளது.