சிறையில் நாடகம்..சீதையைத் தேடிச் செல்வது போல எஸ்கேப் ஆன கைதிகள்!
ராம லீலா நிகழ்ச்சியில் பங்கேற்ற கொலைக் குற்றவாளி கைதிகள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள மாவட்டத்தில் தசரா பண்டிகையை முன்னிட்டு ராம லீலா நாடக நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம் . அந்த வகையில் சிறையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராம லீலா நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறை கைதிகள் இந்த நாடகத்தில் நடித்துள்ளனர்.
அப்போது ரூர்க்கியைச் சேர்ந்த பங்கஜ் மற்றும் கோண்டாவை சேர்ந்த ராஜ்குமார் ஆகிய குற்றவாளிகள் ''வானர்'' வேடத்தில் நடித்துள்ளனர். புராணக் கதை படி இருவரும் சீதையைத் தேடிச் செல்வதாக நடித்துள்ளனர்.அப்போது இருவரும் சிறையிலிருந்து தப்பியுள்ளனர்.
தப்பியோடிய சம்பவம்
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவர்களைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஹரித்வார் மாவட்ட சிறையின் மூத்த சிறை கண்காணிப்பாளர் மனோஜ் குமார் ஆர்யா கூறுகையில், சிறைச்சாலையில் உயர் பாதுகாப்பு முகாம் கட்டப்பட்டு வருவதால், சிறை வளாகத்திற்குள் ஏணி வைக்கப்பட்டுள்ளது.
அந்த ஏணியை பயன்படுத்தித்தான் இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். மாலையில் வழக்கமாக நடக்கும் கைதிகள் கணக்கெடுப்பின்போது இருவரும் தப்பி இருக்கின்றனர் என அவர் கூறினார்.
தப்பி சென்றவர்களில் பங்கஜ் என்பவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும், ராஜ்குமார் கடத்தல் வழக்கில் விசாரணைக் கைதியாகவும் சிறையிலிருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.