4 ஆயிரம் போலீஸார் குவிப்பு; இந்து அமைப்பு போராட்ட எதிரொலி - உச்சகட்ட பரபரப்பு!
போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்ட அறிவிப்பு
மதுரை, திருப்பரங்குன்றம் அருகில் சுப்பிரமணியசாமி கோவிலும், காசி விஸ்வநாதர் ஆலயமும் அமைந்துள்ளது. மறுபுறம் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா தர்கா உள்ளது.
இங்கு ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதேசமயம் முருகன் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தொடர்ந்து, சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு தர்காவில் ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு கந்தூரி விழா நடைபெற உள்ளதாக தர்கா நிர்வாகம் அறிவித்திருந்தது.
ஆனால், இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்தன. தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பினர் மதுரையில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
போலீஸார் குவிப்பு
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை மீது சென்று பக்தர்கள் வழிபட இன்று ஒருநாள் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதியில் 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தடையை மீறி வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் கூறியுள்ளனர்.