நாளை வரை மட்டுமே அவகாசம் - தேர்தல் பத்திர விவகாரம் - உச்சநீதிமன்றம் கெடுபிடி
தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் கோரிய எஸ்.பி.ஐ'யின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தேர்தல் பத்திரங்கள்
கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி முதல் நாட்டில் நடைமுறைக்கு வந்த தேர்தல் பத்திரங்களின் மூலம் தற்போது வரையில் விற்கப்பட்ட பத்திரங்களின் விவரங்களை, மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு (SBI) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேர்தல் பத்திரங்களின் மூலம் பல முறைகேடுகள் நடைபெறுவதாக உச்சநீதிமன்றத்திற்கு பல மனுக்கள் வந்த நிலையில், இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்தது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது, வரும் ஜூன் மாதம் இறுதி வரை கால அவகாசம் வேண்டும் என்று எஸ்.பி.ஐ வங்கி தரப்பில் கோரிக்கை வைத்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், தேர்தல் பத்திரங்கள் நாடு முழுவதும் பல வங்கிக் கிளைகளில் விற்பனை செய்யப்பட்டாலும் அனைத்து விவரங்களும் மும்பையில் உள்ள எஸ்பிஐ மத்திய வங்கிக்கு தான் அனுப்பி வைக்கப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டி, அப்படி இருக்கும் சூழலில் தகவல்களை கொடுப்பதில் எஸ்பிஐ வங்கிக்கு என்ன சிரமம் இருக்கப் போகிறது கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட எளிமையான உத்தரவை பின்பற்ற எஸ்.பி.ஐ. வங்கி கால அவகாசம் கோருவது எந்த வகையில் ஏற்புடையது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி , அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திர நன்கொடை விவகாரங்கள் மிக சுலபமாக சேகரிக்க கூடியது என குறிப்பிட்டு, அதை வெளியிட எஸ்பிஐ வங்கி ஏன் கால அவகாசம் கேட்கிறது என்றும் வினவப்பட்டது.
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 26 நாட்களாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள் என சரமாரியக கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிட எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவாய் பிறப்பித்துள்ளது.
மேலும், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ. வழங்கிய உடன் அந்த விவரத்தை வரும் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது