ஷின்சோ அபே மறைவு - மணற்சிற்பம் வடிவமைத்து அஞ்சலி செலுத்திய கலைஞர்
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுக்கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு
67 வயதான அபே வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அதற்காக இன்று ஷின்சோ அபே நரா நகரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அவரது மார்பில் 2 குண்டுகள் துளைத்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷின்சோ அபே உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிரதமர் மோடி இரங்கல்
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட சர்வதேச தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று ஷின்ஷோ அபேவின் மறைவையொட்டி ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மணற் சிற்பம்
இந்நிலையில், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் மறைவிற்கு மணற்சிற்பம் வடிவமைத்து அஞ்சலி தெரிவித்துள்ளார் ஓடிசாவை சேர்ந்த மணற்சிற்ப கலைஞர் சுதர்ஷன் பட்நாயக். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.