அந்த இந்திய வீரர் மாதிரி 'பாபர் அசாம்' வருவாருன்னு நெனச்சேன்; ஆனால்.. - அப்ரிடி வருத்தம்!
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் குறித்து அந்நாட்டு முன்னாள் வீரர் சாகித் அப்ரிடி பேசியுள்ளார்.
பாபர் அசாம்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் படுதோல்விகளை சந்தித்த பாகிஸ்தான் அணி, லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது.
மேலும், அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் 3 போட்டிகளில் 91 ரன்களை 104.65 என்ற மோசமான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்தது பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் அந்நாட்டு ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சாகித் அப்ரிடி
ஆனால், இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி "கிரிக்கெட்டை விரும்புபவர்கள் சமூக வலைத்தளங்களில் பாபர் அசாம் கேப்டன்ஷிப் பற்றி விமர்சிக்கின்றனர்.
ஆனால், தொடர்ச்சியாக அவரைப் போல் அசத்தக்கூடிய வீரர் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது அரிது. அவரால் உலகக் கோப்பைகளில் அசத்த முடியவில்லை என்பது உண்மை தான்.
விராட் கோலியை போல மேட்ச் வின்னராக பாபர் அசாம் வளர்வார் என்று நான் எப்போதும் விரும்பினேன். இருப்பினும் முதல் நாளிலிருந்தே அவர் மேட்ச் வின்னராக செயல்படவில்லை. ஆனால், அவர் தன்னை முன்னேற்றியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.