எவ்வளவு சொல்லியும் சம்பளம் வாங்கல - இந்திய ஆலோசகரால் நெகிழ்ந்த ஆப்கான்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 3 வெற்றிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
அந்த அணி சமீப காலங்களாகவே மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை ஒரு போட்டியில் வீழ்த்தியது. மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக ஒரு வெற்றியை பெற்று சாதனையும் படைத்தது.
இதுபோன்ற வெற்றிகளால் ஆப்கானிஸ்தான் அணி செமி ஃபைனலுக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வாய்ப்பை நூலிலையில் ஆஸ்திரேலிய அணியிடம் தவறவிட்டது.
ஆப்கானிஸ்தான் அணியின் இந்த வெற்றிகளுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில், இந்தியாவில் நிலவும் சூழ்நிலைகளையும்,
அஜய் ஜடேஜா
மைதானங்களையும் பற்றி தெரிந்து கொள்வதற்காக, அவரை தங்களது அணியின் ஆலோசகராக அந்த தொடரில் ஆப்கானிஸ்தான் நியமித்தது. அவருடைய பயிற்சி மற்றும் வழிகாட்டுதலால் அந்த அணி சிறப்பாகவும் செயல்பட்டது.
இந்நிலையில் தங்களது அணிக்கு ஆலோசகராக செயல்பட்டதற்காக அஜய் ஜடேஜா ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாராட்டியுள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் நசீப் கான் கூறுகையில் "நாங்கள் பலமுறை வலியுறுத்தினோம். ஆனால் 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் எங்களுடன் வேலை செய்ததற்காக ஆப்கானிஸ்தான் வாரியத்திடமிருந்து ஜடேஜா எந்த பணத்தையும் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.
நீங்கள் நன்றாக விளையாடினால் அதுவே என்னுடைய பணம். அந்த பரிசை தான் நான் உங்களிடமிருந்து பெற விரும்புகிறேன் என்று ஜடேஜா எங்களிடம் சொல்லி விட்டார்” என்று தெரிவித்துள்ளார்.