நேஷனல் ஹெரால்டு வழக்கு :ராகுல் காந்தியிடம் மூன்றரைமணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள்
நாட்டின் முதல் பிரதமர் நேருவால் சுதந்திரத்திற்கு முன்பு நிறுவப்பட்ட பத்திரிகை நேஷனல் ஹெரால்டு ஆகும். இந்த பத்திரிகையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி வட்டியில்லா கடன் வழங்கியது.
நேஷ்னல் ஹெரால்டு வழக்கு :
அந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால் அதன் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் இயக்குனர்களாக கொண்ட 'யங் இந்தியா' நிறுவனம் கையகப்படுத்தியது.
இதன் மூலம் அசோசியேட்டட் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை யங் இந்தியா அபகரித்து விட்டதாக சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் பொருளாளர் பவன்குமார் பன்சால், மல்லிகார் ஜூன கார்கே ஆகியோரிடம் அமலாக்கத்துறை ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்திக்கு கடந்த 5-ந்தேதியும், சோனியா காந்திக்கு 8-ந்தேதியும் நேரில் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது.
ராகுல் காந்தி வெளிநாட்டில் இருந்ததால் அவகாசம் கேட்டார். இதனால் அவர் இன்று ஆஜராக புதிய சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. சோனியா காந்தி கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அவரும் அவகாசம் கேட்டார். அவர் 23-ந்தேதி ஆஜராக புதிய சம்மன் அனுப்பப்பட்டது.
தொண்டர்களுடன் சென்ற ராகுல்
அமலாக்கத்துறையின் சம்மனை தொடர்ந்து ராகுல் காந்தி டெல்லியில் உள்ள அந்த அலுவலகம் முன்பு ஆஜராவதற்காக இன்று காலை தனது வீட்டில் இருந்து காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டார். அவருடன் பிரியங்கா காந்தியும் காரில் சென்றார்.
ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறையை கண்டித்து நாடு முழுவதும் சத்யாகிரக போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்து இருந்தது. டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவதற்காக காங்கிரஸ் அலுவலகம் முன்பு திரண்டனர்.
காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பு இருந்து பேரணியாக செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் டெல்லி போலீசார் இதற்கு அனுமதி தரமறுத்தனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படு இருந்தது.
காங்கிரஸ் தலைமை அலுவலகம் அக்பர் சாலையில் உள்ளது. அங்கிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. விசாரணைக்கு ஆஜராவதற்காக ராகுல் காந்தி காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்றார்.
#WATCH | Congress leader Rahul Gandhi accompanied by party leaders and workers marches to the Enforcement Directorate office in Delhi to appear before it in the National Herald case pic.twitter.com/8sd7VctfEG
— ANI (@ANI) June 13, 2022
அவருடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ்பாகல் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் ஊர்வலமாக சென்றனர். தடையை மீறி பேரணி செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
அதிகாரிகள் விசாரணை
துணைநிலை ராணுவ வீரர்கள், போலீசார் அதிக அளவில் குவிக்கப்படு இருந்தனர். பல்வேறு தடுப்புகளும் வைக்கப்படு இருந்தது. போலீஸ் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டன. சிறிது தூரத்தில் பேரணியாக சென்ற ராகுல்காந்தி உள்ளிட்டவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் தடுப்புகளுக்கு மேல் ஏறி நின்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ஊர்வலமாக சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால் அங்கிருந்து அவர் காரில் புறப்பட்டார். காலை 11.10 மணி அளவில் ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு ஆஜரானார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்ட விரோத பணபரிவர்த்தனை குறித்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார். ராகுல் காந்தியிடம் என்ன கேள்விகளை கேட்பது என்பது குறித்து அமலாக்கத் துறையினர் ஏற்கனவே முடிவு செய்து இருந்தனர். அந்த கேள்விகளை வைத்து அவர்கள் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தினர்
ராகுல் காந்தியிடம் முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய விசாரணை சுமார் மூன்றரை மணிநேரம் நீடித்தது. பிற்பகல் 2.30 மணியளவில் ராகுலிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவடைந்தது.
இந்த விசாரணையில், அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்துக்கும் யங் இந்தியாவுக்குமான தொடர்பு? யங் இந்தியாவில் ராகுல் வகிக்கும் பொறுப்பு? யங் இந்தியா நிறுவனத்தில் ராகுல் வைத்திருக்கும் பங்குகள்? எதற்காக காங்கிரஸ் கட்சி கடன் கொடுக்க முடிவு செய்தது? ஏன் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை தொடர்ந்து நடத்த முடிவு செய்யப்பட்டது? என்பது உள்ளிட்ட ஏராளமான கேள்விகளை அமலாக்கப் பிரிவு அதீகாரிகள் ராகுல் காந்தியிடம் கேட்டனர்
அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்தும் ராகுல் காந்திக்கு ஆதரவாகவும் டெல்லியில் காங்கிரசார் பெரும் அளவில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இனிமேல் பெட்ரோல் டீசல் விலை தினமும் அதிகரிக்கும் : ராகுல் காந்தி