எஃப்.ஐ.ஆர்.ஐ எங்களுக்கு காட்ட முடியுமா ? : காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகள் பரிமாற்றத்தில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது என்பது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தொடர்ந்த வழக்கு. இவ்வழக்கில் நேற்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் சுமார் 10 மணிநேரம் விசாரணை நடத்தியது அமலாக்கப் பிரிவு.
போராட்டத்தில் இறங்கிய காங்கிரஸ்
இந்த விசாரணைக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை டெல்லி காவல்துறையினர் தாக்கியதில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாகவும் ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இன்றும் காங்கிரஸ் கட்சியினர் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் போராட்டம் தொடர்பாக ப.சிதம்பரம் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் :
போராட்டம் நடத்துகிற உரிமை உண்டு
மத்தியில் ஆளும் பாஜக அரசு, சட்டத்தையோ ஜனநாயகத்தை மதிப்பது இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. கடந்த 4,5 ஆண்டுகளில் எந்த ஒரு பாஜக தலைவருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதா? எங்களுக்குப் போராட்டம் நடத்துகிற உரிமை உண்டு.

சட்டத்தை மதிப்பதாலேயே நாங்கள் போராடுகிறோம். அமலாக்கப் பிரிவு சட்டத்தை மதித்து நடந்தால் எங்களுக்கு சிக்கல் எதுவும் இல்லை. அமலாக்கப் பிரிவு சட்டத்தை மதிப்பது இல்லை என்பதுதான் பிரச்சினை. எதனடிப்படையில் அமலாக்கத்துறை தன் விசாரணையைத் தொடங்கியுள்ளது?
எஃப்.ஐ.ஆர். இல்லாமல் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்க முடியாது. முதல் தகவல் அறிக்கையை எங்களுக்கு காட்ட முடியுமா? என நேஷனல் ஹெரால்டு வழக்கில் பாஜகவிற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
விசா முறைகேடு வழக்கு : சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் கார்த்தி சிதம்பரம்