தமிழ்நாட்டில் கூலிப்படை கலாச்சாரத்தை வேரோடு அறுக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் கூலிப்படை கலாச்சாரத்தை வேரோடு அறுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் சென்றார். அங்கு அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பிறகு ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அச்சத்தில் பொதுமக்கள்
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் "நண்பர் ஆம்ஸ்ட்ராங்கின் மறைவு செய்தி கேட்ட அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. தமிழ்நாட்டின் சமூக நீதிக்கு மிகப்பெரிய பின்னடைவு.
பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும், ஒன்று சேர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக சொல்லி வந்தவர் ஆம்ஸ்ட்ராங். ஆம்ஸ்ட்ராங்கின் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கூலிப்படை கலாச்சாரத்தை வேரோடு அறுக்க வேண்டும்.
சேலத்தில் அதிமுக நிர்வாகி, கடலூரில் பாமக நிர்வாகி, எனத் தொடர்ந்து பல பேர் படுகொலை செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் பெரிய தலைவரின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர், அதனை போக்க கூலிப்படை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.