அயோத்தி வந்த பிரதமர் மோடி - பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு!
அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார்.
அயோத்தி
உத்தரப்பிரதேசம், அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அங்கு ஏற்கனவே சிறிய அளவில் இருந்த ரயில் நிலையம் ரூ.240 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். தொடர்ந்து புதிதாகக் கட்டப்பட்டுள்ள மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தையும் தொடங்கிவைத்தார்.
மோடிக்கு வரவேற்பு
6,500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம், ஆண்டுக்கு 10 லட்சம் பயணிகளை கையாளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ரயில் நிலையத்தை திறந்துவைத்த பிரதமர் நரேந்திர மோடி, ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அம்ரித் பாரத் ரயிலுக்குள் ஏறி, அதனை ஆய்வு செய்தார்.
மேலும், அங்கிருந்தவாறு இரண்டு புதிய அதிவேக அம்ரித் பாரத் ரயில்களையும், 6 புதிய வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கிவைத்தார். முன்னதாக அயோத்தி ரயில் நிலையத்துக்கு மோடி காரில் சென்றபோது வழிநெடுகிலும் ஏராளமான தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு வந்து அவரை வரவேற்றனர்.
காரில் இருந்து கீழே இறங்கி அதன் படிகளில் நின்றுகொண்டு மக்களைப் பார்த்து கைகளை அசைத்தார். பலர் அவர் மீது பூக்களைத் தூவி வரவேற்றனர்.