சைவ உணவிற்கு தனி.. எதிர்த்த மாணவர்களுக்கு ரூ.10,000 அபராதம் - ஐஐடி-ல் இப்படியொரு விதிமுறையா?
ஐஐடி விடுதியில் சைவத்திற்கு தனி மேஜை ஒதுக்கப்பட்டதை எதிர்த்த மாணவர்களுக்கு அபராதம் விதித்துள்ளது.
விதிமுறை
இந்தியாவில் உள்ள முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்று தான் மும்பை ஐஐடி. இங்கு 3 விடுதிகள் செயல்பட்டு வருகிறது, இதில் பொதுவாக உள்ள உணவகத்தில் சைவ மாணவர்களுக்கு தனியாக 6 மேஜைகள் ஒதுக்கப்படுவதாக உணவக கவுன்சில் அறிவித்தது.
இது குறித்த தகவல் கல்லூரி மாணவர்களுக்கு மெயில் மூலமாக தெரிவிக்கப்பட்டது. அதில், "இந்த சைவ உணவு கொள்கையை மாணவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் அபராதமும் விதிக்கப்படும்” என கூறப்பட்டிருந்தது.
அபராதம்
இந்நிலையில், ஐஐடி உணவக கவுன்சிலின் சைவ உணவுக் கொள்கைக்கு எதிராக மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்தினர். அதற்கு கவுன்சில் போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இடதுசாரி மாணவர்கள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இதுகுறித்து, மும்பை ஐஐடியின் அம்பேத்கர் பெரியார் புலே ஸ்டடி சர்கிள், எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “கல்லூரி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, நவீன காலத்தில் தீண்டாமையை நிலை நிறுத்த செயல்படும் கட்ட பஞ்சாயத்து போல அமைந்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.