தொடர்ந்து 3 முறை பதக்கம் - பாராலிம்பிக்கில் சாதனை படைத்த மாரியப்பன்!
பாராலிம்பிக்ஸ் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்று சாதனையைப் படைத்துள்ளார்.
பாராலிம்பிக்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்று உள்ளனர்.
இந்த நிலையில், ஆண்களுக்கான டி63 உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது . இதில் இந்தியாவிலிருந்து தமிழக வீரர் மாரியப்பன், ஷரத் குமார், சைலேஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். 1.88 மீட்டர் உயரம் தாண்டி ஷரத் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சாதனை
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டைச் சேர்த்த மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார். அமெரிக்காவின் ஃப்ரெச் எஸ்ரா 1.94 மீட்டருடன் தங்கப் பதக்கம் வென்றார். முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு பாராலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
தொடர்ந்து 2020 டோக்யோ பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனையடுத்து தற்போது பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்று மாரியப்பன் வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.