விடுப்பு கோரிய 10 நிமிடம்தான் - ஊழியர் மாரடைப்பால் உயிரிழப்பு!
விடுப்பு கோரிய 10 நிமிடங்களில் ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர் விடுப்பு
கே.வி. ஐயர் என்பவர் தன் சமூக வலைதள பதிவில் பகிர்ந்துள்ள சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது.
அதில், என் அலுவலகத்தில் பணிபுரியும் ஷங்கர் என்பவர் போன் செய்து , முதுகு வலி இருப்பதால் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொள்வதாகக் கூறினார். இது வழக்கமாக, ஊழியர்கள் சொல்லும் காரணம் என்பதால், நானும் சரி என்று கூறினேன்.
இது காலை 8:37 மணிக்கு நடந்தது. அடுத்து, காலை 11:00 மணிக்கு, என் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தது. எடுத்து பேசினால், ஷங்கர் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி வந்தது. நான் அதை நம்பவில்லை.
நேர்ந்த பரிதாபம்
அலுவலகத்தில் பணிபுரியும் மற்றொரு நண்பரும் இதையே கூறினார். நானும், அவரும் ஷங்கர் வீட்டுக்கு சென்றோம். உண்மையிலேயே அவர் இறந்துவிட்டார். விடுப்பு குறித்து என்னிடம் தகவல் தெரிவித்த அடுத்த 10 நிமிடங்களில், அதாவது காலை 8:47 மணிக்கு அவர் உயிர் பிரிந்துள்ளது.
என் குழுவில் ஆறு ஆண்டுகளாக பணிபுரியும் ஷங்கருக்கு, எந்த கெட்ட பழக்கமும் இல்லை. திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர். வாழ்க்கை நிரந்தரம் இல்லை என்பது இதன் வாயிலாக உறுதியாகியுள்ளது.
அதனால், அனைவரிடமும் மகிழ்ச்சியாக வாழ்வோம் என குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்ற விபரங்கள்,எதுவும் இதில் குறிப்பிடப் படவில்லை.