முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கலாம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை கண்டறியப்பட்டுள்ளது.
எலும்பு முறிவு
முறிந்த எலும்புகளை அறுவை சிகிச்சை மூலம் சேர்க்க/கூட்ட உலோகத்தை பயன்படுத்துவது வழக்கம்.
எலும்பு கூடிய பிறகு பொருத்தப்பட்ட உலோகத்தை மீண்டும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவார்கள். அதன் தன்மையை பொறுத்து சிலருக்கு அந்த உலோகம் உடலில் உள்ள எலும்போடு அப்படியே இருப்பதுண்டு.
இந்நிலையில், எலும்புகளை ஒட்ட வைக்கும் பசைகளை சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா, ஜெஜியாங் மாகாணத்தை சேர்ந்த மருத்துவர்கள் இதை உருவாக்கியுள்ளனர்.
பசை கண்டுபிடிப்பு
இதுகுறித்து பேசியுள்ள எலும்பியல் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் லின் சியான்ஃபெங், சிப்பிகள் நீருக்கடியில் சில இடங்களில் உறுதியாக ஒட்டிக்கொண்டிருப்பதை கவனித்த பிறகு இந்த எலும்பு பசையை உருவாக்கும் யோசனையை பெற்றேன்.
இந்த பசையை கொண்டு உடைந்த எலும்புகளை மூன்று நிமிடங்களில் ஒட்ட முடியும். எலும்புகள் குணமடைந்ததும் இந்த பசை தானாகவே கரைந்து விடும் என கூறியுள்ளார். சுமார் 150 பேருக்கு இதை கொண்டு பரிசோதனையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
‘போன்-02’ என அறியப்படும் இந்த பசையின் செயல்பாடு மற்றும் பாதுகாப்பு தன்மை உள்ளிட்டவை ஆய்வு கூடத்தில் சோதனை நடத்தியதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மெட்டல் இம்பிளான்ட் செய்ய வேண்டிய தேவை இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.