தொடர் போராட்டம்; தமிழக வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு - போலீஸார் குவிப்பு!
கர்நாடக எல்லைகளில் தமிழக பேருந்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா பந்த்
காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராடி வருகிறது. ஆனால், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததாலும், ஒட்டுமொத்தமாக பருவமழை குறைந்ததாலும்
நீர் வரத்து குறைவாக இருக்கிறது என்று கூறி திறக்க மறுத்துவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக காணொலி வாயிலாக காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது.
அனுமதி மறுப்பு
அதில், 18 நாட்கள் தொடர்ச்சியாக விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. கர்நாடக அரசு இந்த உத்தரவுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
மேலும், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று பல்வேறு கன்னட அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்தை கன்னட அமைப்புகள் நடத்துகின்றன.
இதனால் தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா செல்லும் பேருந்துகள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. ஓசூர் வழியாக கர்நாடகாவின் பெங்களூர் செல்லும் தமிழக பதிவெண் கொண்ட பேருந்துகள், ஈரோடு மாவட்டத்தின் பண்ணாரியிலிருந்து செல்லும் பேருந்துகள்,
நீலகிரியின் கக்கநல்லா சோதனைச் சாவடி, கூடலுரின் தொரப்பள்ளி வனத்துறை சோதனை சாவடியில், உதகையிலிருந்து மசினக்குடி வழியாக செல்லும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.