இனி இவர்களுக்கும் மகளிர் உரிமை தொகை - அமைச்சர் திட்டவட்டம்!
மனநலம் குன்றிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரம் நடைபெற்றது. அப்போது கீழ்வேளூர் தொகுதியில் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் குழந்தைகள் மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என நாகை மாலி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் கீதா ஜீவன்,
அமைச்சர் அறிவிப்பு
"குழந்தை நல மையங்களை சீர்மிகு மையங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு அனுமதி அளிக்கப்பட்ட 1503 மையங்களில் 1203 மையங்களுக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 500 குழந்தைகள் மையங்களுக்கு கட்டிடம் கட்ட முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக" தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால், மனநலம் குன்றிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உரிமைத் தொகை மறுக்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், "மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெற்றாலும், அந்த குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையும் பெறலாம் என விதிவிலக்கு உள்ளது" என தெரிவித்துள்ளார்.