எல்லை மீறும் ஸ்ரேயாஸ், இஷான் கிஷன்; கடுப்பில் பிசிசிஐ - கடும் நடவடிக்கை!
இஷான் கிஷன் மற்றும் ஷ்ரோயஸ் ஐயர் மீது பிசிசிஐ கடும் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.
இஷான் கிஷன்
கடந்த உலகக் கோப்பை தொடரில் இருந்தே இஷான் கிஷன் இந்திய அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார். இதனால் ஒரு கட்டத்தில் அதிருப்தியடைந்த அவர்,
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ-யிடம் தெரிவித்து விடுமுறை எடுத்தார். அதற்கு அனுமதி வழங்கிய நிலையில் குடும்பத்துடன் நேரம் செலவிடாமல் அவர் துபாய்க்கு சென்று 2024 ஆண்டு புத்தாண்டு பார்ட்டியில் கலந்துகொண்டார்.
தொடர்ந்து அவர் இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்றால் உள்ளூர் போட்டிகளில் விளையாடப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் அறிவுறுத்தினார். மேலும், பிசிசிஐ ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடச் சொல்லி வலியுறுத்தி வந்தது. ஆனால் அவர் அதில் கவனம் செலுத்தாமல் பரோடாவுக்கு சென்று பாண்டியா சகோதரர்களுடன் சேர்ந்து
ஸ்ரேயாஸ் ஐயர்
ஐபிஎல் 2024 தொடரில் விளையாடுவதற்கான பயிற்சிகளைத் துவங்கினார். இவரைப்போன்றே, ஸ்ரேயாஸ் ஐயரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தொடர்ந்து சொதப்பி வந்தார். அதன்பின்னர் 3வது டெஸ்ட் போட்டியில் முதுகுவலி காரணமாகத் தொடரில் இருந்து விலகினார்.
இந்நிலையில், அவரையும் ரஞ்சி தொடரில் விளையாடவும் அவர் உடல்நிலை சரியாகியுள்ளதா? என பிசிசிஐ அவரை பரிசோதிக்கும் படி என்சிஏ-விற்கு உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, என்சிஏ மருத்துவர் பிசிசிஐ-க்கு அனுப்பிய மின்னஞ்சலில், “ஸ்ரேயாஸ் ஐயருக்கு எந்தவிதமான புதிய காயங்களும் ஏற்படவில்லை. மேலும் அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார்” என்று தெரிவித்தனர்.
இதனால், தனது அறிவுறுத்தல்களைக் கேட்காத ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் மீது 2023 – 24 காலண்டர் வருடத்திற்கான இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலிலிருந்து நீக்குவதற்கு பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாகச் தகவல் வெளியாகியுள்ளது.