IPL 2024: இந்தியா திரும்பிய விராட் கோலி; 15 வருஷ எதிர்பார்ப்பு - வெல்லுமா ஆர்சிபி!
ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்தியா திரும்பியுள்ளார்.
விராட் கோலி
ஐபிஎல் 17வது சீசனுக்கான கிரிக்கெட் தொடர் இன்னும் 5 நாட்களில் தொடங்கவுள்ளது. மார்ச் 22ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது.
15 ஆண்டுகளாக ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. இதனை மாற்றி அமைக்க ஆர்சிபி அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
எகிறும் எதிர்பார்ப்பு
புதிய பயிற்சியாளர் ஆண்டி பிளவர் மற்றும் கேப்டன் டூ பிளஸிஸ் தலைமையில் ஆர்சிபி அணியின் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆர்சிபி அன்பாக்ஸ் நிகழ்ச்சி இன்னும் 2 நாட்களில் நடக்கவுள்ளது.
இந்நிலையில், ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி லண்டனில் இருந்து மும்பை திரும்பி இருக்கிறார். இதனால் இன்று அல்லது நாளை ஆர்சிபி அணியுடன் விராட் கோலி இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு சில வாரங்களுக்கு முன் 2வது குழந்தை பிறந்தது. இதற்காக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
தொடர்ந்து மகன் பிறந்ததை மகிழ்ச்சியுடன் அறிவித்த தம்பதியினர், அகாய் என்று பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.