30 நாள் சம்பளத்துடன் லீவு, ஐபோன் - இந்திய ஐடி ஊழியரை அசரவைத்த நிறுவனம்
நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்குகிறது.
ஸ்வீடன் நிறுவனம்
இந்தியாவைச் சேர்ந்த அசுதோஷ் என்பவர் ஸ்வீடனில் ஐடி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ ஒன்று கவனம் பெற்று வைரலாகி வருகிறது.
அதில், ”ஸ்வீடனில் முழுநேர ஊழியர்கள் வருடத்திற்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை நேரத்தைப் பெற உரிமை உள்ளது. பெரும்பாலான அலுவலகங்கள் பொது விடுமுறைக்கு முன் அரை நாள் விடுமுறை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளன.
புதிதாக வேலையில் சேருவோருக்கு ஆரம்பமே அமர்க்களப்படுத்தும் விதமாக, ஆப்பிள் உள்ளிட்ட பெரிய பிராண்ட் மடிக்கணினி மற்றும் லேட்டஸ்ட் வெர்சனில் ஐபோன் வழங்கப்படுகிறது. மேலும் மசாஜ் செய்து கொள்ள வசதிகள், ஜிம்மில் உறுப்பினராக சேரும் வசதி, பிற ஆரோக்கிய சேவைகளுக்காக அலவன்ஸ் மட்டும் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை ஸ்வீடிஸ் நிறுவனங்கள் தருகின்றன.
அசத்தல் சலுகைகள்
இது அங்கு வேலை செய்வோரின் சிறப்பான வாழ்க்கை தரத்திற்கு நிறுவனம் தரும் முக்கியத்துவத்திற்கு உதாரணம் ஆகும். நீண்ட தூரத்தில் இருந்து வந்து வேலை செய்வோருக்காக, சில நிறுவனங்கள் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை இருப்பிட அலவன்ஸ் வழங்குகின்றன.
மேலும் 10,000 ரூபாய் மாதாந்திர உதவித்தொகையுடன், மதிய உணவும் வழங்கப்படுகிறது. ஊழியர்களுக்கான சலுகைகள் இத்துடன் முடிவடையவில்லை. குழந்தையை பார்த்துக் கொள்ளும் பெற்றோர்கள் தங்கள் சம்பளத்தில் 80 சதவீதத்துடன் 480 நாட்கள் விடுப்பு பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
மேலும் ஊழியர்கள் கார்ப்பரேட் சேமிப்புடன் கார்களை குத்தகைக்கு எடுத்துக் கொள்ள முடியும். அதேபோல் வேலை இழப்பவர்களுக்கு தொழிற்சங்கம் ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரை நிதி உதவி வழங்குகின்றன.
கோடை காலத்தில் வேலை நேரம் மிக குறைவாக இருக்கும். ஒரு மணி நேரம் வரை பெர்மிசன் எடுத்துக் கொள்ள முடியும். சொல்லாமல் கூட விடுமுறை எடுத்துக் கொள்ள முடியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.