82 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான நான்காவது டி.20 போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
டி.20 தொடர்
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 2 போட்டியிலும், இந்திய அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில்,இரு அணிகள் இடையேயான நான்காவது டி.20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தினேஷ் கார்த்திக் 55 ரன்களும், ஹர்திக் பாண்டியா 46 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா அபார வெற்றி
இதன்பின் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறினர்.
டி காக் (14), வாண்டர் டூசன் (20) மற்றும் மார்கோ ஜென்சன் (12) ஆகிய மூன்று வீரர்களை தவிர மற்றவர்களில் ஒருவர் கூட ஒற்றை இலக்க ரன்னை கூட தாண்டாமல் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 16.5 ஓவரில் வெறும் 87 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த போது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த தென் ஆப்ரிக்கா அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.