இந்திய அணியுடன் மீண்டும் இணையும் தோனி - எதற்கு தெரியுமா?
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்தத் தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி நியமிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து 2வது டி20 போட்டி நாளை(நவம்பர் 19) ராஞ்சியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் போட்டியில் இந்திய அணியினருக்கு கூடுதல் பலமாக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி பங்கேற்கவுள்ளார். ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். ஆனால் இன்று திடீரென ஜே.எஸ்.சி. ஏ மைதானத்தில் வருகைப்புரிந்தார். அங்கு இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியினரை சந்தித்தார். மேலும் அங்குள்ள டென்னிஸ், உடற்பயிற்சி கூடம் போன்ற இடங்களுக்கு சென்று வந்தார்.
இதனால் நாளை நடைபெறவுள்ள 2வது டி20 போட்டியில் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்த தோனி கலந்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.