வறுத்தெடுக்கும் வெயில்.. ஒரே மாதத்தில் வரலாறு காணாத உச்சபட்ச வெப்பநிலை பதிவு - தவிக்கும் நாடுகள்!
இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வெப்பம்
கடந்த செப்டம்பர் மாதத்தில் ஐரோப்பிய நாடுகளான ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜெர்மனி, போலாந்து, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் மிக உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. மனிதகுல வரலாற்றிலேயே இது மிக அதிகபட்சமான வெப்பநிலை என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பிரான்ஸ் நாட்டின் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி அந்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதத்தில் பதிவான வெப்பநிலை அளவு 21.5 டிகிரி செல்சியஸ் ஆகும்.
கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை கணக்கிடும் போது சராசரியாக பதிவான வெப்பநிலையை விட தற்போதைய வெப்பநிலை என்பது 3.5 டிகிரி செல்சியஸ் முதல் 3.6 டிகிரி செல்சியஸ் கூடுதலாகும். இங்கு சராசரி வெப்பநிலையை காட்டிலும் கடந்த 2 ஆண்டுகளாக வெப்பநிலை கூடுதலாக பதிவாகி வருகிறது.
தவிக்கும் நாடுகள்
இந்நிலையில், ஜெர்மனியில் கடந்த செப்டம்பர் மாதத்தில் சராசரியை விட வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகியுள்ளது. போலாந்து நாட்டில் 3.6 டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவாகியுள்ளது.
ஆஸ்திரியாவில் மிக அதிக அளவிலான வெப்பநிலை பதிவாகியுள்ளது, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஐஸ்கட்டி மலைகள், கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
மனிதகுல வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 2023 ஆம் ஆண்டு தான் மிக அதிகபட்ச வெப்பநிலை கொண்ட ஆண்டாக இருக்கும் என்று ஐரோப்பாவில் அண்மையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.