எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம்; அதிமுக சார்பில் நாளை உண்ணாவிரதம்
எதிர்க்கட்சி துணைத் தலைவரை அங்கீகரிக்க கோரி அதிமுக சார்பில் நாளை உண்ணாவிரதம் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுகவினர் வெளியேற்றம்
இரண்டாவது நாளாக இன்று கூடிய தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சபாநாயகர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சபாநாயகர் அப்பாவு உத்தரவை அடுத்து தர்ணாவில் ஈடுபட்ட இபிஎஸ் ஆதரவாளர்களை அவை காவலர்கள் வெளியேற்றினர்.
பின்னர் பேசிய சபாநாயகர் அப்பாவு, சட்டமன்ற விதியின் படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி தான் அங்கீகரிக்கப்பட்டது. மற்ற பதவிகள் எல்லாம் அவர்களது சட்டமன்ற உறுப்பினர்களை திருப்திபடுத்த கொடுக்கும் பதவிகள்.
சபையில் இருக்கைகள் ஒதுக்கப்படுவது குறித்து முடிவெடுப்பது பேரவைத் தலைவரின் முழு விருப்பம் தான். அதில் யாரும் தலையிட முடியாது என்று கூறினார்.
உண்ணாவிரதம் அறிவிப்பு
இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசியல் நோக்கோடு செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்க மறுத்ததை கண்டித்து அதிமுக சார்பில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் போராட்டம் நடக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.