பால்கனி அறை சர்ச்சை - நடந்தது இதுதான் ? உண்மையை உடைத்த சுரேஷ் ரெய்னா!
2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது தொடர்பாக சிஎஸ்கே அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பேசியுள்ளார்.
பால்கனி விவகாரம்
2020-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அப்போது திடீரென சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா, தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே சொந்த ஊர் திரும்பினார்.
இதற்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் அவருக்கு பால்கனி அறை கொடுக்காததே காரணம் என்று சொல்லப்பட்டது. இதுகுறித்து அந்த அணியின் வீரர்களும் இதுவரை பொதுவெளியில் பேசியதில்லை. மேலும், 2022-ம் ஆண்டு மெகா ஏலத்தின்போது சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியால் வாங்கப்படவில்லை.
இதனால் பால்கனி சர்ச்சை உண்மையென்றே ரசிகர்கள் பலரும் கருதி வந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய சுரேஷ் ரெய்னா "2020-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது பாதான் கோட்டில் எனது உறவினரின் மொத்த குடும்பமும் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டனர்.
ரெய்னா விளக்கம்
இதனால் எனது தந்தை மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் இருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் ஊர் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தோனி மற்றும் சிஎஸ்கே நிர்வாகத்திடம் கூறினேன்.
குடும்பத்தினரே முக்கியம் என்பதால், நான் உடனடியாக திரும்பினேன். அதன்பின் 2021-ம் ஆண்டு சீசனில் அனைவரும் இணைந்து விளையாடி கோப்பையை வென்றோம். நான் மீண்டும் சிஎஸ்கே அணியுடன் இணைய முடியாமல் போனது.
ஏனென்றால் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியுடன் இணைய வேண்டுமென்றால் கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட 30 நாட்கள் ஹோட்டலில் தனியறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் காரணமாகவே மீண்டும் ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்காமல் இங்கு இருந்தேன். அதனை சிஎஸ்கே அணி நிர்வாகமும் புரிந்து கொண்டனர்" என்று தெரிவித்துள்ளார்.