2 விஷயத்தில் சொதப்பிய ரோஹித்; அதனால் தான் கேப்டன்ஷிப்.. முன்னாள் வீரர் தாக்கு!
கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் ஐபிஎல் தொடரில் ரோஹித் ஷர்மா அசத்தவில்லை என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
ரோஹித் ஷர்மா
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 2024 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்பட்டார். இந்த வருடம் அவர் சாதாரண வீரராக விளையாடி வருகிறார். தற்போது மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட்டு வருகிறார்.
ஆனால், ரோஹித் ஷர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, பாண்ட்யாவை கேப்டனாக நியமித்ததில் ரசிகர்களுக்கு உடன்பாடில்லை. இதனால் பாண்ட்யா எந்த மைதானத்தில் விளையாடினாலும் ரசிகர்கள் அதிருப்தி ஒளியை எழுப்பி வருகின்றனர். ஏனெனில் 2013 - 2020 வரையிலான காலகட்டங்களில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணி 5 கோப்பைகளை வென்றுள்ளது.
இந்நிலையில் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் ஐபிஎல் தொடரில் ரோஹித் ஷர்மா அசத்தவில்லை என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது "ஹர்திக் பாண்டியா மும்பை அணியால் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட வீரர். எனவே அவரை அவர்கள் மும்பை இந்தியன்ஸ் வீரராக பார்க்கிறார்கள். 2013ல் ரோஹித் ஷர்மாவிடம் மும்பை கேப்டன்ஷிப் கொடுக்கப்பட்ட போது அது ரிக்கி பாண்டிங்கிடம் எடுக்கப்பட்டது.
குறைசொல்ல முடியாது
இதுவும் அதே போன்ற உரிமையாகும். அந்த காலத்தில் சச்சின், பாண்டிங், ஹர்பஜன் போன்ற சீனியர்கள் ரோஹித்துக்கு ஆதரவு கொடுத்தனர். இங்கே ரோஹித் ஷர்மா போன்ற பேட்ஸ்மேனின் மகத்துவத்தை பற்றி நான் கேள்வி எழுப்பவில்லை.
ஆனால் கோடிகளை முதலீடு செய்யும் ஒரு ஐபிஎல் அணியின் பார்வையில் பார்க்கும் போது கடந்த 4 வருடங்களாக அவருடைய புள்ளிவிவரங்கள் நன்றாக இல்லை. 2020ல் அவருடைய தலைமையில் மும்பை வென்றது. ஆனால் அதன் பின் கடந்த 4 வருடங்களில் மும்பை வெல்லவில்லை. கடந்த 3 சீசன்களில் ரோஹித் ஷர்மா 300-க்கும் குறைவான ரன்களே அடித்துள்ளார். எனவே ஒரு பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் அவர் வெற்றிகரமாக செயல்படவில்லை.
அதே சமயம் ஐபிஎல் தவிர்த்து அவர் மற்ற இடங்களில் ரன்கள் அடித்துள்ளார். அதனாலயே ரோஹித்தை தாண்டி அணியை பார்க்க வேண்டும் என்ற இடத்திற்கு மும்பை வந்துள்ளார்கள். இதைப் பற்றி கடந்த வருடமே அவரிடம் மும்பை பேசியிருக்கலாம். எனவே வெற்றிகரமான மும்பை அணி இப்படி ஒரு முடிவை எடுத்ததற்காக நீங்கள் குறை சொல்ல முடியாது" என்று தெரிவித்துள்ளார்.