இந்திக்காகவே துடிக்கிறது மத்திய அரசின் இதயம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முழுக்க முழுக்க இந்திக்காகவே துடிக்கிறது மத்திய அரசின் இதயம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம்
மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய முதலமைச்சர், குடியரசு தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குழு அளித்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன.
அமித்ஷா குழுவின் பரிந்துரைகள், இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். இந்தி மொழி திணிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தமிழனத்தை தமிழரை பண்பாட்டை காக்கும் போராட்டமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறோம். இந்திய ஒன்றியத்தில் இந்தி மொழி திணிப்பதை மத்திய அரசு தனது வழக்கமாகவே கொண்டுள்ளது.
முதலமைச்சர் குற்றச்சாட்டு
ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான் என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு ஒரே மொழி என்ற பெயரில் பிற தேசிய மொழிகளை அளிக்க முயற்சி நடக்கிறது.

பல்வேறு மொழியினர் வாழும் நாடு இது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும், அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
ஆங்கிலத்தை மொத்தமாக அகற்ற மத்திய பாஜக அரசு முயற்சி எடுத்து வருகிறது. முழுக்க முழுக்க இந்திக்காகவே துடிக்கிறது மத்திய அரசின் இதயம்.
ஆட்சிக்கு வந்ததே இந்தியை திணிக்க தான். ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ், மத்திய பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்துக்கு பதில் இந்தி மொழியை பயிற்று மொழியாக்க அமித்ஷா குழு பரிந்துரை செய்துள்ளது.
அனைத்து இந்திய தேர்வுகளையும் இந்தி மயமாக்க துடிக்கிறார்கள். இந்தி தெரியாதவர்கள் மத்திய அரசின் பணி பெற முடியாத வகையில் இந்தி திணிப்பு நடந்து வருகிறது.
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும் அம்மொழிகளை பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.
இந்தி மொழி பேசாத மாநில மக்களின் உரிமைகள் நிலை நாட்டப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.