ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அவமதித்த பாஜக - ஜெயக்குமார் கடும் கண்டனம்
தமிழரான வி.கே.பாண்டியனை கண்டு ஏன் பாஜக அஞ்சுகிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
வி.கே.பாண்டியன்
ஒடிசாவில் நாடாளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைக்கான தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருக்கிறது. இங்கு பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மதுரையை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான வி.கே.பாண்டியன் ஒடிசா மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிநார். அதன் பின் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனி செயலாளராக இருந்த இவர் 2023 வரை அப்பதவியில் இருந்து விருப்ப ஒய்வு பெற்றார். அதன் பின் பிஜு ஜனதா தளம் கட்சியில் இணந்து, நேரடி அரசியலில் குதித்த இவர் நவீன் பட்நாயக்கின் வலது கரம் போல் திகழ்கிறார். தற்பொழுது கேபினட் மினிஸ்டர்க்கு இணையான பதவியில் உள்ளார்.
ஜெயக்குமார் கண்டனம்
தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும், நவீன் பட்நாயக்கை விட வி.கே.பாண்டியனையே அதிகமாக தாக்கி பேசினர். ஒடிஷாவை ஒரு தமிழர் ஆள்வதா என அமித்ஷா பேசினார். ஒரிசா பூரி ஜெகநாதர் ஆலய சாவி தமிழ்நாட்டில் உள்ளது என பிரதமர் மோடி மறைமுகமாக தாக்கி பேசினார். இந்த பேச்சுக்கு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பாஜகவிற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
சமீபத்தில் தேர்தல் பிரசார விளம்பரம் ஒன்றை பா.ஜ.க. வெளியிட்டது. அதில் ஒரு நபரை வி.கே.பாண்டியன் போல சித்தரித்து அவருக்கு தமிழர் பாரம்பரியமிக்க வேட்டை சட்டை அணிந்தவாறு ஓட்டலில் வாழை இலையில் உணவு அருந்துவது போலவும் அதை மற்றவர்கள் கேலி செய்வது போலவும் வீடியோ வெளியிட்டப்பட்டிருந்தது. வாழையில் இலையில் பழைய சோறு வைப்பது போன்று அப்போது உணவு வாழை இலையை விட்டு வெளியே பழைய சோறு கொட்டுவது போன்றும் பா.ஜ.க. விளம்பரம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதில் அவர் கூறியதாவது,
"தமிழன் என்றோர் இனமுண்டு,தனியே அவர்க்கொரு குணமுண்டு" என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை நாம் உணர்ந்தவர்கள்!அறிந்தவர்கள்!
ஒரு தமிழன் ஒடிசாவில் முதன்மையான இடத்திற்கு சென்று விடக் கூடாது என்று எத்தனையோ இழிசொற்களை பாஜக ஏவியது!
தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழ் இனத்தை இழிவுபடுத்தி பார்க்க வேண்டும் நோக்கத்தில் தமிழர் பாரம்பரியமிக்க வேட்டி-சட்டையுடன் ஒருவர் வாழை இலையில் உணவருந்துவதை போலவும் அதை மற்றொருவர் கேலி செய்வதை போலவும் ஒரு தேர்தல் விளம்பரத்தை பாஜக வெளியிட்டுள்ளது. வி.கே.பாண்டியன் அவர்களை போன்ற ஒருவர் வேட்டி-சட்டை அணிந்து இருப்பதாக அனைத்து விளம்பரங்களிலும் பாஜக சித்தரித்துள்ளது.
உலகிற்கே நல்வழியையும் பாரம்பரியத்தையும் கற்று கொடுத்த முதல் இனம் தமிழினம்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கியத்திலும் அறிவியலிலும் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள்! என்பது பாஜகவிற்கு தெரிய வாய்ப்பில்லை.
ஒரு தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது.
எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக..எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?
கடந்த ஆண்டு இதே நாளில் இதே வி.கே.பாண்டியன் தான் ஒடிசா ரயில் விபத்தின் போது படுகாயமடைந்து இருந்த தமிழர்களுக்கு தேவையான இரத்தமும் உரிய சிகிச்சையும் உடனடியாக கிடைப்பதற்கு உறுதுணையாக நின்றவர். தான் பிறந்த மண்ணிற்கும் இருக்கும் மண்ணிற்கும் உள்ள மக்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைக்கு நேரில் சென்று அறிவுறுத்தியவர்.
ஒரு மனிதனை இனத்தாலும் மொழியாலும் மதத்தாலும் பிரித்து, பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாக தான் பாஜக பார்க்கிறது.
மதுரை மண்ணின் இந்த மறத்தமிழன் அறத்தின் வழி நின்று வென்று காட்டுவார்!' எனக் கூறியுள்ளார்.