பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் விடுவிப்பு விவகாரத்தில் மத்திய மற்றும் குஜராத் அரசுகள் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை
குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது 20 வயதான கர்ப்பிணி பெண்ணான பில்கிஸ் பானு 11 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

அவரது 3 வயது மகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இந்த நிலையில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்த 11 பேரும் குஜராத் மாநில அரசால் விடுதலை செய்யப்பட்டனர். நாட்டையே உலுக்கிய சம்பவத்தில் தொடர்புடையவர்களை அந்த மாநில அரசு விடுதலை செய்தது.

வெளியே வந்த அவர்களை சிறைவாயிலில் ஆரத்தி எடுத்து இனிப்புகள் வழங்கி வரவேற்ற வீடியோ காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குற்றவாளிகள் 11 பேர் முன் கூட்டியே விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் அபர்ணா பட், கபில் சிபல், மகுவா மொய்த்ரா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிலான அமர்வு மத்திய மற்றும் குஜராத் மாநில அரசுக்கள் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.