சிக்கிய கருப்பு பெட்டி - விமானத் துறை அமைச்சர் முக்கிய தகவல்
கருப்பு பெட்டி குறித்த முக்கிய தகவலை விமானத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருப்பு பெட்டி
அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
விமான நிலையத்தின் அருகில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருமே உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்தில் மொத்தமாக 274 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் விமானத்தில் பயணித்த 241 பேரும் கட்டடத்தில் இருந்தவர்களில் 33 பேரும் அடங்குவர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, “அகமதாபாத் விமான விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.
அமைச்சர் தகவல்
விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கதைகள் இதயத்தை நொறுக்குகின்றன. உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு அனைத்து வகை உதவியும் செய்யப்படும். விசாரணையைத் தொடங்குவதற்காக அதிகாரிகள் உடனடியாகக் களத்துக்கு சென்றனர். விசாரணைக்காக உள்துறைச் செயலர் தலைமையில் மற்றொரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் துறை நிபுணர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தடயவியல் மற்றும் மருத்துவ நிபுணர்கள் விசாரணையில் பங்கேற்றுள்ளனர். மேலும், விமானப் போக்குவரத்துத் துறை செயலர், உள்துறை கூடுதல் செயலர், குஜராத் பிரதிநிதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த விசாரணைக் குழுவுக்கு 3 மாதம் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் மிகவும் கறாரான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. பாதுகாப்பை மேம்படுத்த புதிய வழிமுறைகள் கொண்டு வரப்படும். விசாரணை அறிக்கை வந்தபின் உரிய நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.