முடிவுக்கு வராத துப்பாக்கி கலாச்சாரம் - அமெரிக்காவில் தந்தையை சுட்டுக்கொன்ற 2 வயது சிறுவன்!
அமெரிக்காவில் 2 வயது சிறுவன் ஒருவன் தவறுதலாக தன் தந்தையை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைத்தூக்கும் துப்பாக்கி கலாச்சாரம்
அமெரிக்காவில் அண்மைக்காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறி வருகின்றன.
பள்ளி, தேவாலயம், சூப்பர் மார்க்கெட், மருத்துவமனை என மக்கள் அதிகளவில் கூடும் இடங்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று பல உயிரிழப்புகள் பதிவாகி வருகிறது.
சமீபத்தில் டெக்சாஸில் உள்ள பாப் பள்ளி ஒன்றில் 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்து பள்ளி சிறுவர்களை சரமாரியாக சுட தொடங்கினான். இந்த தாக்குதலில் 19 குழந்தைகள் உள்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கைத்துப்பாக்கி பயன்படுத்துபவர்களுக்கான சட்டங்களை கடுமையாக்க கோரிக்கை விடுத்தார்.
தந்தையை சுட்டுக்கொன்ற சிறுவன்
இந்நிலையில் அமெரிக்காவில் 2 வயதே ஆன சிறுவன் ஒருவன் தவறுதலாக தன் தந்தையை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்படி, ரெஜி மஃப்ரி- மேரி அய்லா தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் லோட் செய்யப்பட்ட கைத்துப்பாக்கியை கவனிக்காமல் வீட்டில் அப்படியே வைத்துள்ளனர்.
விளையாட்டாக துப்பாக்கியை எடுத்த 2 வயது சிறுவன் தவறுதலாக தன் தந்தையை சுட்டுள்ளான். இதனால் ரத்த வெள்ளத்தில் 26 வயதான ரெஜி மஃப்ரி சரிந்துள்ளார்.
அவருக்கு மனைவி மேரி முதலுதவி செய்துள்ளார். இதனை தொடர்ந்து அவரச அழைப்பை தொடர்புக்கொண்டு போலிசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரெஜியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ரெஜி தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் என போலிசார் நினைத்த நிலையில் அவரின் மகனே அவரை தவறுதலாக சுட்டுக்கொன்றுள்ளார் என தெரிய வந்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
துப்பாக்கி சீர்திருத்த சட்டம்
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் தருணம் வந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியிருந்த நிலையில் தற்போது நியூயார்க் மாகாண கவர்னர் துப்பாக்கி சீர்திருத்த சட்டங்களின் தொகுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
கடுமையாக்கப்பட்ட துப்பாக்கி உரிமை சட்டம் மாநில செனட்டில் நிறைவேற்றப்பட்ட துப்பாக்கி சீர்திருத்த சட்டத்திற்கு கவர்னர் கேத்தி ஹோச்சுல் ஒப்புதல் அளித்துள்ளார். பஃபலோவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் நடந்த இனவெறி படுகொலையைத் தொடர்ந்து துப்பாக்கிச் உரிமை சட்டங்களை கடுமையாக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி ,துப்பாக்கி வாங்குவதற்கான வயதை வரம்பை 18ல் இருந்து 21 ஆக உயர்த்தியுள்ளார், மேலும் பொதுமக்கள் கவச உடை போன்றவற்றை வாங்கவும் இந்த சட்டம் தடைவிதிக்கிறது குறிப்பிடத்தக்கது.
சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் - தொடரும் சோதனைகள்..!