10 மாசமா.. 14000 ஆண்கள், பெண்களாக மாறி பெற்ற மகளிர் உரிமைத் தொகை - மெகா மோசடி!
14 ஆயிரம் ஆண்கள், பெண்களை போல பதிவு செய்து மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்துள்ளனர்.
லாட்கி பகின்
மகாராஷ்டிராவில் மகளிர் உரிமைத் தொகை லட்கி பஹின் யோஜனா என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது. தேர்தலையொட்டி, அவசரமாக கொண்டுவரப்பட்டதால், பயனாளர்கள் விவரங்கள் குறித்து முறையாக ஆய்வு செய்யவில்லை.
இந்நிலையில் இந்த திட்டத்தில் 14 ஆயிரத்து 298 ஆண்கள் முறைகேடாக நிதி உதவி பெற்று வந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதுகுறித்த தகவலை பகிர்ந்த துணை முதலமைச்சர் அஜித்பவார்,
பெண்களுக்கான திட்டத்தில் நிதி உதவி பெற்ற ஆண்களிடம் இருந்து அவர்கள் பெற்ற பணம் திரும்ப பெறப்படும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அமைச்சர் அதீதி தட்காரே இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
மெகா மோசடி
பெண்கள் நலத்துறை 'லாட்கி பகின்' திட்ட பயனாளர்கள் தகவல்களை ஆய்வு செய்து வருகிறது. இதில் வருமான வரித்துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் 'லாட்கி பகின்' திட்டத்தில் பயன் பெற தகுதியில்லாத 26.3 லட்சம் பெண்கள் நிதி உதவி பெற்று வருவது தெரியவந்தது.
சிலர் 'லாட்கி பகின்' தவிர வேறு திட்டப்பயன்களையும் பெற்று வந்து உள்ளனர். அவர்களின் பெயர் பயனாளர்கள் பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
பட்டியலில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டவர்களின் விவரங்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் சரிபார்ப்பார்கள். அதன்பிறகு தகுதி உள்ளவர்கள் நீக்கப்பட்டு இருந்தால் அவர்கள் மீண்டும் சேர்க்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.