நடுரோட்டில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்து, துணி துவைத்து வினோத போராட்டம்!
இளைஞர் ஒருவர் நடுரோட்டில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்து, துணி துவைத்து வினோத போராட்டத்தில் ஈடுபட்டார்.
சீரற்ற சாலை
கேரளா மாநிலம், மலப்புரம் பாண்டிக்காடு சாலையில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை, மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், பல விபத்துகள் நடக்கிறது. மேலும் வாகன ஓட்டிகள் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
இந்த அவல நிலை குறித்து அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல சாலையில் உள்ள பள்ளத்தில் குளித்தும், துணிகளைத் துவைத்தும், மலப்புரத்தைச் சேர்ந்த ஹம்சா என்ற இளைஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நூதன போராட்டம்
பாண்டிக்காட்டில் இருந்து பாலக்காடு செல்லும் சாலைகளில் எங்குப் பார்த்தாலும் குண்டும் குழியுமாக உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன் அனைத்து ரோடுகளும் போடப்பட்டுள்ளது. ஆனால், மீண்டும் பள்ளங்கள் உருவாகியுள்ளது.
இதை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல அவ்வழியாக வந்த எம்.எல்.ஏ யு.ஏ.லத்தீப் முன் இளைஞர் தவம் செய்ததுடன் சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் குளித்தும், துணி துவைத்தும் காட்டியுள்ளார்.
மேலும், இங்கு ஏராளமான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. அதிகாரிகள் கவனம் செலுத்தாத காரணத்தினால் தான் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.