40 ஆண்டுகால நட்பு ..சாவிலும் இணைபிரியாத நண்பர்கள்
40 ஆண்டுகளாக மதவேற்றுமையின்றி நண்பர்களாக இருந்து இருவர் சாவிலும் இணைபிரியாத சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஜூப்ளி சாலை, அல்லா கோவில் அருகே வசித்தவர் மகாலிங்கம் (78). இவர், காளியம்மன் கோவில் பூசாரியாக இருந்ததுடன், அப்பகுதியில் டீக்கடையும் நடத்தி வந்தார்.
இவரது, வீட்டின் எதிர்புறம் வசித்து வந்தவர் ஜெயினுலாபுதீன்(66). இவர், ரைஸ் மில் நடத்தி வந்தார். இவர்கள் இருவரும், ஹிந்து, முஸ்லிம் என, வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், 40 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இருவரது இல்லங்களிலும் நடைபெற்ற, சுப, துக்க நிகழ்ச்சிகளில் தவறாமல் இருவரும் பரஸ்பரம் பங்கேற்றனர்.
வயது முதிர்வு காரணமாக இருவரது உடல் நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டது . கடந்த சில நாட்களாக இருவரும், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்த படுக்கையில் சிகிச்சை பெற்றனர். இருவரும், நேற்று முன்தினம் மாலை, அரை மணி நேரத்துக்குள்ளாக அடுத்தடுத்து மரணம் அடைந்தனர். கடந்த, 40 ஆண்டுகளாக, மதங்களை கடந்து நண்பர்களாக பழகி வந்ததுடன், சாவிலும் இணைபிரியாத இவர்களுக்கு, இருவரது உறவினர்களும், அப்பகுதி மக்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.