புஷ்பா 2 படம் பார்க்க சென்ற ரசிகை உயிரிழப்பு.. மகன் உயிருக்கு போராட்டம் - என்ன நடந்தது?
புஷ்பா 2 படம் பார்க்க பெண் கூட்டநெரிசலில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புஷ்பா 2 படம்
நடிகர் அல்லு அர்ஜூன். நடிகை ராஷ்மிக்க மந்தானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான `புஷ்பா 2’ பான் இந்தியா படம் இன்று அதிகாலை வெளியானது. இதையொட்டி பல இடங்களில் உள்ள தியேட்டர்கள் முன் ரசிகர்கள் கூட்டம் திரண்டது. பெரும்பாலானோர் குடும்பம், குடும்பமாக படம் பார்க்க சென்றுள்ளனர்.
அந்த வகையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சேர்ந்தவர் பாஸ்கர். இவர் தனது மனைவி ரேவதி (39), மகன் ஸ்ரீதேஜ் (9), மகள் சன்விகா (7) ஆகியோருடன் இன்று அதிகாலை அருகில் உள்ள ஒரு தியேட்டருக்கு புஷ்பா 2 சினிமா பார்க்க சென்றுள்ளனர்.
அங்கு திரண்ட ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. சாலையெங்கும் தள்ளுமுள்ளு காணப்பட்டது. எனினும் கூட்டநெரிசலை பொருட்படுத்தாமல் பாஸ்கர் தம்பதி தங்கள் பிள்ளைகளுடன் தியேட்டர் வளாகத்திற்குள் செல்ல முயன்றனர்.
என்ன நடந்தது?
அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பாஸ்கர் குடும்பத்தினர் சிக்கி தவித்தனர். கீழே விழுந்த அவர்கள் மீது பலர் விழுந்தனர். இதில் அனைவரும் அலறி கூச்சலிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் அனைவரையும் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தில் ரேவதி, தேஜ் இருவரும் நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ரேவதி ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், தேஜ் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். போலிசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.