மணப்பெண் ஒன்றுதான், ஆனால் மாப்பிள்ளை 2 - குழம்பிப்போன அதிகாரிகள்!
கேரளாவில் 1 பெண் ஒரே சமயத்தில் 2 பேரை திருமணம் செய்வதற்கு விண்ணப்பித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லம்
கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள பத்தனாபுரம் பகுதியை சேர்ந்தவர் இந்த இளம்பெண். இவர் பத்தனாபுரம் சப் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் ஜூன் 30-ம் தேதி , "சிறப்பு திருமண சட்டத்தின் கீழ்" அதே பகுதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்வதற்காக மனு கொடுத்து உள்ளார்.
அதேபோல் புலனூர் பகுதியில் உறுகுந்நு பகுதியை சேர்ந்த இன்னொரு இளைஞரையும் திருமணம் செய்வதற்காக புனலூர் சப் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் ஜூலை 13 ந்தேதி அதே இளம்பெண் மனு அளித்திருக்கிறார். இவர் இரண்டு ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் இரண்டு பேரை திருமணம் செய்வதாக மனு அளித்தது குறித்து ஆய்வில் அதிகாரிகள் குழப்பத்தில் இருந்தனர்.
விசாரணை
இந்நிலையில், அந்த பெண்ணை அலுவலகத்திற்கு அழைத்தனர், அப்பொழுது அவர் புனலூரை சேர்ந்த இளைஞருடன் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து விளக்கம் தந்தார். மேலும், இந்த இளைஞருடன் சில காலம் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தும் வந்துள்ளார், பின்னர் வாக்குவாதம் காரணமாக பிரிந்து இவரது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.
அப்பொழுது பத்மநாபபுரத்தை சேர்ந்த இன்னொரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த இளைஞர் ஒரு வெள்ளை பேப்பரில், தன்னை கையெழுத்து போட வைத்ததாகவும், அது தான் பத்மநாபபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் தனது பெயரில் கொடுக்கப்பட்ட திருமண விண்ணப்பம் என்று கூறினார். இதனை நம்ப மறுத்த அதிகாரிகள் அந்த பெண் சொல்லும் 2 ஆண்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்திக்க வேண்டும் என்றும் அவர்களிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.