பெண் ஊழியர் பாலியல் வன்கொடுமை வழக்கு - நா.த.க. நிர்வாகிக்கு ஜாமீன் மறுப்பு!
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நா.த.க. நிர்வாகிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
நா.த.க. நிர்வாகி
சென்னை கிண்டியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில்( தலைமை செயல் அதிகாரி) CEOவாக இருக்கும் சக்திவேல் நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை மாநிலச் செயலாளராகவும் உள்ளார்.
இந்த நிலையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு தருவதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் பணியிலிருந்து விலகினார். பின்னர் இது தொடர்பாக அடையார் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சக்திவேலைக் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சக்திவேலுக்கு ஜாமின் வழங்கச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
பாலியல் வன்கொடுமை
இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகவும், சக்திவேல் மீது மேலும் பல பெண்கள் பாலியல் புகார் அளித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ஜாமீன் வழங்கினால், அமெரிக்கக் குடியுரிமை வாங்கி வைத்திருக்கும் சக்திவேல் அங்குத் தப்பிச் செல்லவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சக்திவேலின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.