தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்; 2 மணி நேரம் நின்ற ரயில் - 15 ரயில்கள் ரத்து!
தண்டவாளத்தில் பெண் கார் ஓட்டியதால் 2 மணி நேரம் வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தண்டவாளத்தில் கார்
லக்னோவை சேர்ந்தவர் ரவிகா சோனி (33). ஹைதரபாத்தில் ஒரு சாஃப்ட் வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் செய்வது வழக்கம்.
சமீபத்தில் இவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நாகலபல்லி - சங்கர பல்லி இடையே 7 கி.மீ தூரத்துக்கு தண்டவாளத்தின் மீது தனது காரை ஓட்டிச் சென்றார்.
பெண் கைது
இதனைப் பார்த்த அங்குள்ள பொதுமக்கள் விரட்டி சென்று காரை நிறுத்தும்படி எச்சரித்தனர். ஆனால் இதனை காதில் வாங்காத ரவிகா காரை வேகமாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள தண்டவாளத்தில் ரயில் ஓட்டி வந்த பைலட், இது தொடர்பாக அருகே உள்ள ரயில் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
இதற்கிடையில் பொதுமக்கள் ஓடி வந்து, அந்த காரை நிறுத்தி, ரவிகா சோனியை காரில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கினர். உடனே தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த போலீஸார் பெண்ணை கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த மார்க்கத்தில் சுமார் 2 மணி நேரம் வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், 15 பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.