10 ஆண்டுகளுக்கு பின் மசோதா ஏன்..? இது பெரும் சதி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படவேண்டும் என கோரிக்கை வைத்தார்.
ராகுல் காந்தி செய்தியாளர்கள் சந்திப்பு
இந்திய தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மகளிர் இடஒதுக்கீடு மசோதா சிறப்பானது தான் என குறிப்பிட்டு, ஆனால் அதில் மக்கள் தொகை கணக்கெடுப்பும் தொகுதி மறுசீரமைப்பும் முக்கியம் என்றும் சுட்டிக்காட்டினார்.
மகளிர் இடஒதுக்கீட்டை இன்றே அமல்படுத்துவது சிக்கலான விஷயமல்ல என குறிப்பிட்ட அவர், இன்றே அதனை நடைமுறைப்படுத்தவும் முடியும் என்றும் ஆனால் அதனை மத்திய பாஜக அரசு செய்ய விரும்பவில்லை என குற்றம்சாட்டினார்.
சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும்
மக்கள் முன்பு மசோதாவை தாக்கல் செய்து விட்டதாக பாஜக அரசு கூறும் நிலையில், இந்த மசோதா நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் 10 ஆண்டுகாலம் ஆகும் என கூறி அதனை நாட்டின் பெண்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றும் இது பெரும் சதி என கூறினார். இதன் காரணமாக இந்த இடஒதுக்கீடு மசோதா நடைமுறைக்கு வருமா? வராதா? என்பது புரியாத விஷயம் தான் என கூறி, இது மக்களை திசைதிருப்புகிற மோசமான செயல் என ராகுல் காந்தி சாடினார்.
மேலும், இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் தான் என குறிப்பிட்ட ராகுல் காந்தி, இருப்பினும் மத்திய அரசு அதிகாரங்களில் அவர்களுக்கு பெரிய அதிகாரமுமில்லை என கூறி, இதர பிற்படுத்தப்பட்டோர் மத்திய பாஜக அரசால் புறக்கணிக்கப்படுகின்றனர் என குற்றம்சாட்டினார்.
தாக்கல் செய்யப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் ஓபிசி-க்கு உள் இடஒதுக்கீடு அவசியம் என கூறி, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுபு நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டு நாட்டின் உள்ள மக்களில் ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை கோடி பேர் இருக்கின்றனர் என்பதை கண்டறிய சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என கேட்டுக்கொண்டார்.