விஜய் சொன்ன குட்டி கதையில் உள்ள சிறுவன் யார்? யார் அந்த பாண்டிய மன்னன்?
விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டி கதையில் உள்ள சிறுவன் யார் என்பதை பார்க்கலாம்.
தவெக மாநாடு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் நேற்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில் 45 நிமிடங்கள் பேசிய தவெக தலைவர் விஜய், தனது அரசியல் எதிரிகளை அறிவித்ததோடு, வழக்கம் போல குட்டி கதை ஒன்றை சொன்னார்.
குட்டி கதை
அந்த கதையில், "ஒரு நாட்டுல ஒரு பெரிய போர் வந்துச்சாம். அப்போ அந்த நாட்டுல பவர்புல் ஆன தலைமை இல்லாம போனதால ஒரு பச்சப் புள்ள கைல தான் அந்த பொறுப்பு இருந்துச்சாம். அதனால அந்த நாட்டுல இருந்த பெரிய தலைங்க எல்லாம் ரொம்ப பயந்துட்டாங்களாம். அந்த சின்னப் பையன் படைய நடத்துற பொறுப்ப ஏத்துக்கிட்டு போர்க்களம் போலாம்னு சொன்னானாம்.
அப்போது, அந்த பெருந்தலைங்க எல்லாம் நீயே சின்ன பையன்.. இது பெரிய போர்க்களம் பவர் FULL ஆன பெரிய எதிரிங்கலாம் இருப்பாங்க களத்துல அவங்கள சந்திக்கறதுலாம் சாதாரண விஷயம் இல்லப்பா சொன்னா கேளு இது விளையாட்டு இல்ல போர்னா படைய நடத்தனும் அத்தனை எதிரிங்களையும் சமாளிக்கணும், தாக்கு பிடிக்கணும், உனக்கு யாரும் கூட்டோ துணையோ இல்லாம எப்படி பா போர நடத்துவ எப்படி ஜெயிப்பன்னு எல்லாரும் கேட்டப்போ..
எந்த பதிலும் சொல்லாம போருக்கு தனியா தன் படையோடு போன பாண்டிய வம்சத்தை சேர்ந்த அந்த பய என்ன செஞ்சான்னு.. சங்க இலக்கியத்துல சொல்லியிருக்காங்க. படிக்காதவங்க படிச்சு தெரிஞ்சிக்கோங்க இல்லன்னா..படிச்சவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க. ஆனா கெட்ட பையன் சார் அந்த சின்ன பையன் " என முடித்தார்.
பாண்டிய நெடுஞ்செழியன்
விஜய் சொன்ன குட்டி கதையில் உள்ள பாண்டிய மன்னன் யார் என பலரும் தேடி வருகின்றனர். விஜய் அந்த குட்டி கதையில் குறிப்பிட்டது தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் ஆவார்.
பாண்டிய நெடுஞ்செழியன் சிறு வயதாக இருக்கும் போதே அவரின் தந்தை இறந்து விட்டதால் சிறு வயதிலே மன்னராக முடிசூடி கொண்டார். மன்னருக்கு இள வயதுதான் எனவே சுலபமாக நாட்டை கைப்பற்றி விடலாம் என எண்ணி, சோழநாட்டை ஆண்ட இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்தனர்.
பாண்டிய படைகளுக்கு தலைமை தாங்கி படைகளை வழிநடத்திய நெடுஞ்செழியன், தலையாலங்கானம் என்ற இடத்தில் பெரும் போர் மூண்டது. நெடுஞ்செழியனின் வீரத்தை சமாளிக்க முடியாத சேர, சோழ படைகள் கொஞ்ச கொஞ்சமாக போரில் பின்வாங்கின. தலையாலங்கானம் என்ற இடத்தில் வெற்றி பெற்றதால் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் என அழைக்கப்பட்டார். இதே போல் அரசியலில் தன்னை சின்ன பையன் உனக்கு என்ன தெரியும் என பேசும் பெரிய கட்சிகளை புறமுதுகிட்டு ஓட செய்வேன் என தவெக தலைவர் விஜய் மறைமுகமாக கூறியுள்ளார்.