10 நிமிடத்துக்கு ஒரு குழந்தை கொலை; மயக்க மருந்தே இல்லாமல் ஆப்ரேஷன் - WHO தலைவர் வேதனை!
காஸாவில் 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தைக் கொல்லப்படுவதாக WHO தலைவர் வேதனை தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் இறப்பு
ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் இறங்கியதில் காஸாவே நிலைக்குலைந்து போயுள்ளது. இந்த தாக்குதல் ஒரு மாதத்தைக் கடந்துவிட்டது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ளது.
அதில், 4100 குழந்தைகள், 2640 பெண்கள் அடங்கும். குறிப்பாக இஸ்ரேல் காஸாவில் உள்ள மருத்துவமனைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றது. ஆனால் இஸ்ரேல் அதற்கு செவி சாய்ப்பதில்லை.
WHO தலைவர் வேதனை
இந்நிலையில், ஐக்கிய நாட்டு பாதுகாப்பு மன்றத்தில் பேசிய டெட்ரோஸ் அதானோம், “காயமடைந்தோர், உடல்நலம் குன்றியோர், இறக்கும் தருவாயில் உள்ளோரால் மருத்துவமனைகளின் பொதுத் தாழ்வாரங்கள் நிரம்பி வழிகின்றன. சவக்கிடங்குகளும் நிரம்பிவிட்டன.
மயக்க மருந்து இல்லாமல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. போர் காரணமாக இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அடைக்கலம் நாடுகின்றனர். 10 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உயிரிழக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.