தேசிய அரசியலில் புயலை கிளப்பிய தேர்தல் பத்திரம்..?என்ன அது..?? சர்ச்சையானது எப்படி..?
தற்போது தேசிய அரசியலில் நாடாளுமன்ற தேர்தலை விட முக்கியத்துவம் பெற்றுள்ளது தேர்தல் பத்திரம்.
தேர்தல் பத்திரம் என்றால் என்ன..?
கட்சிகளுக்கு வழங்கும் நிதிகளை நேரடியாக வங்கிகளில் சென்று பத்திரம் ஒன்றின் மூலம் செலுத்தி அதனை மக்கள் தாங்கள் விருப்பப்படும் கட்சிக்கு நிதியாக வழங்கலாம் என்ற திட்டம் தான் தேர்தல் பத்திர திட்டம். கட்சிகள் தேர்தலுக்கு நன்கொடை வாங்குவது வழக்கமான ஒன்று தானே. அதில் என்ன சர்ச்சை எங்கு வந்தது என்றால் தான், நாம் இந்த தேர்தல் பத்திரம் குறித்து தெளிவாகதெரிந்து கொள்ளவேண்டி இருக்கின்றது.
கடந்த 2017-18ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் சட்டப்பூர்வமாக 29 ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்டது.
சர்ச்சையானது எப்படி..?
இந்தத் தேர்தல் பத்திரங்களில் வாங்குபவரின் பெயர், முகவரி, நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. அது தனிநபராகவோ, நிறுவனமாகவோ கூட இருக்கலாம். இந்த நிதியை நிபந்தனையின்றி 15 நாட்களில் கட்சிகள் பயன்படுத்தி கொள்ளலாம் அவ்வாறு இல்லையென்றால் அத்தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும்.
இந்த தேர்தல் பத்திரமானது அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய வங்கிகளில் கிடைக்கும். 1000 ரூபாய் பத்திரம் என துவங்கி 1 கோடி ரூபாய்க்கு வரையிலான தேர்தல் பத்திரங்கள் உள்ளது. இதில் ஒருவர் பணம் செலுத்தினால் அது நேரடியாக அக்கட்சி தங்கள் நிதியாக மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம்.
நிதி தரப்படுபவர்களின் விவரங்கள் மற்றவர்களுக்கு தெரியாது என்ற காரணத்தால், அது கருப்பு பணத்தை ஊக்குவிக்கும் என்ற பேச்சுகளும் அதிகளவில் எழுந்துள்ளது. மேலும், எதிர்க்கட்சிகள் இதன் மூலம் ஆளும் கட்சி அதிகப்படியான நிதியை பெற்றுவிடும் என்றும் குறை கூறி வருகிறார்கள்.
பாஜகவிற்கு கிடைத்து எவ்வளவு
இதில் எதிர்க்கட்சிகள் தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளதற்கு காரணம், பாஜக பெற்ற நிதியின் அளவு தான். கடந்த 2016-17 முதல் 2021-22 வரையிலான காலகட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு 16,437 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. இவை ஏழு தேசிய கட்சிகள் மற்றும் 24 மாநில கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
இந்த தொகையில் 9,188 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் வாயிலாக வழங்கப்பட்டுள்ளது. இதில் பாஜவுக்கு 5,272 கோடி ரூபாயும் அதாவது 57 சதவீதம் நிதியாக கிடைத்துள்ளது, காங்கிரஸ் கட்சிக்கு 952 கோடி ரூபாயும், மீதித் தொகை இதர கட்சிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.