கிரிக்கெட்டில் இதுதான் எனது கடைசி தொடர் - ஓய்வை அறிவித்த CSK ஜாம்பவான் பிராவோ
அணைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெற உள்ளதாக டுவைன் பிராவோ அறிவித்துள்ளார்.
டுவைன் பிராவோ
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டுவைன் பிராவோ கடந்த 2004-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி விளையாடி வந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக சில காலம் இருந்த இவர் 2018 ஆம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இதுவரை 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒருநாள் போட்டிகள் மற்றும் 91 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார்.
ஐபிஎல்
இதன் பின் உலகின் பல்வேறு டி20 லீக் தொடர்களில் விளையாடி வந்தார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக ஆடிய சென்னை அணியின் முக்கிய வீரராக வலம் வந்தார். அதிக விக்கெட் எடுப்பவருக்கு வழங்கப்படும் purple cap ஐ 2 முறை பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். 2 ஆண்டுகளுக்கு முன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
மேலும் ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் டிவைன் பிராவோ முதல் இடத்தில் உள்ளார். 578 டி20 போட்டிகளில் விளையாடி 630 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். மேலும் 6970 ரன்களும் குவித்து தன்னை T20 போட்டிகளில் ஆல் ரவுண்டராக நிரூபித்துள்ளார்.
ஓய்வு
தற்போது 40 வயதான நிலையில் கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் ஆடி வரும் இவர் இத்துடன் ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து இருக்கிறார். ஓய்வு குறித்து பேசிய அவர் "கரீபியன் மக்களுக்கு முன் என்னுடைய கடைசி கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளேன். என்னுடைய பயணம் துவங்கிய இடத்திலேயே முடிய உள்ளதை நினைத்து மகிழ்ச்சி" என தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் தற்போது CSK அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.