இரவில் ரீல்ஸ் பார்ப்பதால் பித்தம் அதிகரிக்குமாம் - சித்த மருத்துவர் எச்சரிக்கை
இரவில் ரீல்ஸ் பார்ப்பதால் பித்தம் அதிகரிப்பதாக சித்த மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
இரவில் ரீல்ஸ்
உலக யோகா தினத்தை முன்னிட்டு ஆரோக்யா சித்த மருத்துவமனையின் மயிலாப்பூர் கிளை சார்பில் ‘யோகாவும் உடல்நலமும்’ என்ற கருத்தரங்கம், பாரதிய வித்யா பவனில் நடைபெற்றது.
இதில் ஆரோக்யா மருத்துவமனை நிறுவனர் மருத்துவர் கு.சிவராமன், மருத்துவ மனையின் மயிலாப்பூர் கிளை மருத்துவர் பிரிய தர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். யோகா, பிராணாயாமம் குறித்து விளக்கமளித்த சிவராமன், தூக்கம் குறைவதுதான் பல சிக்கல்களுக்கு காரணம்.
மருத்துவர் எச்சரிக்கை
இரவில் ரீல்ஸ் பார்த்து பித்தத்தை அதிகரிக்க செய்கிறோம். இது நம்மை உளவியல் நோயாளியாக மாற்றுகிறது. இதற்கு பிராணாயாமம் அவசியம். தொற்றா நோய்களை தடுக்க போதிய புரதம் மூலம் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க வேண்டும். சைவத்தில் சோயா, பன்னீர், சுண்டல் எடுத்துக் கொள்ளலாம்.
சுண்டலால் வாயு தொல்லை வரும் என்பவர்கள் இஞ்சி, சீரக தூள் பயன்படுத்தலாம். வெள்ளை சர்க்கரை எனும் விஷத்தை தவிர்க்க வேண்டும். இனிப்பு ருசிக்கு பழங்கள் சாப்பிடலாம். இளம் வயதினரிடம் அதிகரித்துள்ள புற்றுநோயை கட்டுப்படுத்த, குப்பை உணவுகளை தவிர்க்க வேண்டும்.
பொதுவாகவே உப்பை குறைக்க வேண்டும். வாழைப்பூ, கருவேப்பிலை, பாகற்காய், நெல்லிக்காய், சுண்டைக்காய் போன்ற கசப்பு, துவர்ப்பு காய்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். புளிப்பு, காரம் மிதமாக சேர்க்கலாம். ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க, உடல்நலனுக்கு சிறந்த உணவும், மன நலனுக்கு யோகாவும் அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.